அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை

தற்போதைய நெருக்கடி இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற சொல்லொனாத் துயரங்களுக்குக்கான காரணங்களை பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு இலங்கையர்களாகிய நாங்கள் பொறுப்புக்கூற வேண்டியதில்லையா? இந்த நெருக்கடிக்கு நாமனைவரும் எவ்வாறு பங்களித்திருக்கிறோம். இப்போதும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாம் பங்களிக்கிறோமா, நமது பங்களிப்பு நெருக்கடியை மக்கள் நலநோக்கில் தீர்ப்பது பற்றியதாக இருக்கிறதா அல்லது அரசியல்வாதிகளின் இழிசெயல்களுக்கு ஒத்தூதுவதன் மூலம் அமைதிகாத்து அங்கீகரிப்பதன் மூலமும் இந்நெருக்கடி தொடர வழிசெய்கிறதா. இவை குறித்து என்றாவது நாம் சிந்தித்து இருக்கிறோமா. ஏல்லாவற்றிலும் மேலாக இந்த நெருக்கடி நாமே நமது தலையில் போட்டுக் கொண்டது என்ற உண்மை எம்மில் எத்தனை பேருக்கு உறைத்திருக்கிறது. இந்த வினாவுடன் இவ்வாரக் கட்டுரையைத் தொடங்க விரும்புகிறேன்.

இப்போது புதிதாகப் பாராளுமன்றம் வந்திருக்கின்ற தம்மிகப் பெரேரா மீது நம்பிக்கை வைக்கச் சொல்லி ஒரு பொதுப்புத்தி மனநிலை கட்டமைக்கப்படுகிறது. அவர் ஒரு “வெற்றிகரமான வியாபாரி” எனவே அவரால் நாட்டை மீட்க இயலும் என்று பலர் சொல்கிறார்கள். ஏமாற்றாத, கொள்ளையடிக்காத, அரசியல்தரகு செய்யாத, மக்களைச் சுரண்டாத வெற்றிகரமான வியாபாரி என்று யாரும் கிடையாது. ஆனால் நவதாராளவாதச் சொல்லாடலில் இவை “புத்திசாலித்தனம்” என்றும் “நெழிவுசுழிவுகளை அறிந்திருத்தல்” என்றும் சொல்லப்படுகிறது. ஏழை மக்களின் பசியை குறுங்கடன் திட்டங்கள் மூலம் தீர்த்துவைத்தமைக்காக நோபல் பரிசுபெற்ற முகமட் யூனிஸ் ஒரு கந்துவட்டிக்காரன் என்ற உண்மை சில ஆண்டுகளில் வெளியானது. இதே வகைப்பட்டதே “வெற்றிகரமான வியாபாரி” என்ற படிமம்.

இலங்கையர்களுக்கு இது புதிதல்ல. சில காலம் முன்னர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராவதற்கு தேசியப் பட்டியல் ஊடாகப் பாராளுமன்றம் வந்தபோது ஊடகங்களும், அரசியல் அவதானிகளும் உருவாக்கிய பொதுப்புத்தி மனநிலை அவரை ஒரு பொருளாதார மீட்பராக முன்னிறுத்தியது. இவ்வாறே 2019ம் ஆண்டு நாட்டை மீட்பதற்கான வலுவான தலைவராக கோத்தபாய முன்னிறுத்தப்பட்டார். இவை இரண்டும் இலங்கையில் ஏற்படுத்திய பேரிடரர்களை நாமறிவோம். இவ்வாறு தனிமனிதர்கள் மீது அதீத நம்பிக்கை வைக்கும் மனோபாவம் இலங்கை அரசியலுடன் பின்னிப் பிணைந்தவொன்று. அதன் அண்மைய உதாரணத்திற்கு ரணில் விக்கிரமசிங்க பிரதமரானவுடன் அவர் பொருளாதாரத்தை சீர்படுத்துவார் என்று சொல்லப்பட்ட கதைகளை நினைத்துப் பார்க்கலாம்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கை அரசியல் தவிர்க்கவியலாமல் தனிநபர் வழிபாடுகளின் வழிப்பட்டதாகவே உருவானது. பின்கொலனிய இலங்கை அரசியலின் அடையாள உருவாக்கம், குடும்ப அரசியலாக அமைந்தபோதும் அதை உருமறைத்து விக்கிரக வழிபாட்டு அரசியல் முன்னெழுந்தது. டி.எஸ். சேனாநாயக்கவின் திடீர் மரணம் அவரைத் தேசபிதாவாக உருமாற்றவும், எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை அவரை சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் நவீன தலைமகனாகவும் உருவாக்கவும் உதவியது. இது காலப்போக்கில் இருபெரும் அரசியற் கட்சிகளின் வளர்ச்சிக்கும் அதன்வழிப்பட்ட குடும்ப அரசியலின் இருப்புக்கும் நிலைப்பிற்கும் வழிகோலியது. இதன் மறுகரையில் சிங்கள-பௌத்த தேசியவாத்திற்குப் போட்டியாக எழுந்த தமிழ்த்தேசியவாதமும் படித்த உயர்வர்க்க ஆங்கிலம் பேசும் சட்டந்தெரிந்த தலைமைகளையே உருவாக்கியது. பின்கொலனிய இலங்கையில் முனைப்படைந்த இரண்டு தேசியவாதங்களும் உயர்வர்க்க நலன்களை அடையாள அரசியலின் ஊடு தக்கவைத்தது. அதற்கு அடித்தள மக்களிடம் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தி மனநிலை முக்கிய காரணமானது.

இந்த மனோநிலை குறித்த குடும்பங்களையும் தலைவர்களையும் முன்னுதாரணமாகவும் நாயகர்களாகவும் முன்னிறுத்தியது. 1980கள் வரை மிகுந்த செல்வாக்குடன் இருந்த போக்கு சமூகத்தில் அரசியல் மேலாண்மைக்கான அங்கீகாரமாக மாறியது. இதனால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசியற் தலைமைகள், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், அளவுகணக்கற்ற முறையில் செல்வம் சேர்ப்பவர்களாகவும், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும் மாறினார்கள். இதில் முதலாவது வெடிப்பை ரணசிங்க பிரேமதாச ஏற்படுத்தினார். ஏந்தவொரு அரசியற்குடும்பத்தின் பிரதிநிதியாகவோ, உயர்ரடுக்கைச் சேராதவராகவோ இருந்த அவர் அடித்தட்டு மக்களின் புதிய நாயகனாக உருவானார். இது சிங்கள் உயர்வர்க்க அரசியலடுக்குகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழ்த்தேசியவாதம் 1970களில் சந்தித்திருந்த நெருக்கடியும் தமிழ் அரசியற்பிரதிநிதிகளின் இயலாமையும் இளையோரின் உயிரோட்டமான அரசியல் எழுச்சியால் மோசமான பின்னடைவைச் சந்தித்தது. இளையோரின் அமைப்பாக்கமும் அதற்கான மக்கள் ஆதரவும் பாரம்பரியத் தேசியவாதத் தலைமைகளின் விருப்புக்குரியதாக இருக்கவில்லை. 1980களில் விடுதலைப்புலிகளின் எழுச்சி தமிழ்த்தேசியவாதத் தலைமைகளில் ஒரு வெடிப்பை ஏற்படுத்தியது.

இருதேசியவாதங்களிலும் 1980களில் ஏற்பட்ட வெடிப்புக்கள் பல வகைகளில் சாதாரண மக்களின் நீண்டகால கோரிக்கைகளின் எதிர்பார்ப்புகளின் வெளிப்பாடுகளாக இருந்தபோதும் அவை இன்னொரு வகையிலான விக்கிரக வழிபாட்டுக்கு வழிசெய்தன. பிரேமதாசவும் பிரபாகரனும் கேள்விக்களுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக மாறினார்கள். விமர்சனங்கள், கேள்விகள், எதிர்வினைகள் எதுவும் சகிக்கப்படவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள் வாவியில் மிதந்தார்கள் அல்லது மின்கம்பங்களில் தொங்கினார்கள். தேசியவாதத்தின் பெயரால் மக்களின் பெருந்திரளால் அது பொறுத்துக் கொள்ளப்பட்டது. இனமுரண்பாடு கொடிய போராகிய நிலையில் வலிமையான தலைவரின் தேவையை சிங்களத் தேசியவாதம் தொடர்ந்து வலியுறுத்தி ராஜபக்ஸவின் வருகையை உறுதிசெய்தது. தமிழ்த்தேசியவாதம் பிரபாகரனைச் ‘சூரியக் கடவுள்’ என்ற நிலைக்கு உயர்த்தி அனைத்தையும் அவர்தலையில் வைத்துவிட்டு அமைதியாக ஒதுங்கிக் கொண்டது.

இந்த விக்கிர உருவாக்கத்தின் ஆபத்துக்களை சிங்கள தமிழ்த்தேசியவாதங்கள் அனுபவித்த போதும் அதிலிருந்து இன்றுவரை வெளியாக இயலவில்லை. அதன் தொடர்ச்சியே கோத்தபாய ராஜபக்சவின் வருகை. இலங்கைக்கு ஒரு சர்வாதிகாரியே தேவை, இலங்கைச் சமூகத்தை ஒழுங்கமுடையதாக மாற்ற வேண்டும். அதற்கு மக்களை ஒரு கட்டமைப்புடன் இயக்கக்கூடிய இராணுவத் தலைவரே பொருத்தமானவர் ஆகிய கோஷங்களுக்குக் கிடைத்த அங்கீகாரமே கோத்தபாயவின் தேர்தல் வெற்றி. இது மகிந்த ராஜபக்ஸவின் தொடர்ச்சியாக இருந்தபோதும் அதிலிருந்து மிகவும் வேறுபட்டது. முதலாவது தன்னை நேரடியாகவே சர்வாதிகாரி என அழைத்துக்கொண்ட ஒருவரைத் தலைவராக இலங்கையர்கள் தெரிவு செய்தார்கள். இரண்டாவது அரசியலுக்கு அப்பால் வல்லுனர்களின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பலாம் என்று முன்வைக்கப்பட்ட வாதத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள்.

இன்றைய நெருக்கடி இவ்விரண்டின் தோல்வியையும் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. ஆனால் இது பொதுப்புத்தியில் எதுவித மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்பதையும் நோக்க வேண்டியுள்ளது. முழமையான சர்வாதிகார நடைமுறையில் நாட்டைக் கட்டியெழுப்பவியலாது என்ற உண்மை இப்போது இலங்கையர்களுக்கு உறைத்துள்ளதா என்ற கேள்விக்கான பதிலை அடுத்த தேர்தல் முடிவுகள் காட்டி நிற்கும். கோத்தபாயவும் அவரது வியத்மக கும்பலும் முன்மொழிந்த வல்லுனர் அரசியல் (technocratic politics) படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளப் பலரும் தயாராக இல்லை. இவ்வரசியலின் தொடர்ச்சியே தம்மிக பெரேராவின் வருகையும் அதைத்சூழூம் ஆரவாரங்களும்.

கோத்தபாய முன்மொழிந்த சர்வாதிகாரமும் வல்லுனர் அரசியலும் இரண்டு அடிப்படைகளில் கட்டியெழுப்பப்பட்டது. ஒன்று இராணுவமையச் சிந்தனைவாதம் இரண்டாவது சிங்களபௌத்த பேரினவாதம். இந்த நெருக்கடி இவ்விரண்டிலும் எதுவித மாற்றத்தையும் செய்துவிடவில்லை. மாறாக இவ்விரண்டும் தொடர்ந்தும் சிங்கள மக்கள் மத்தியிலான பொதுப்புத்தி மனநிலையில் செல்வாக்குச் செலுத்தும் கதையாடலாக உள்ளது. இந்தக் கதையாடலைத் தமக்கு வாய்ப்பாக்கவே ‘ஜனாதிபதிக் கனவில்’ உள்ள எல்லோரும் முனைகிறார்கள். கடந்த கால்நூற்றாண்டுகால இலங்கை அரசியலில் வலுவான தலைவன் (strongman) என்ற படிமம் ஆழமாகப் பதிந்துள்ளது. இவ்வரசியற்போக்கு நிலப்பிரபுத்துவத்தின் வேரூன்றிய கூறுகள், நட்பு அரசியல், குடும்பம் மற்றும் ஆதரவாளர்களுக்கான ஆட்சி, ஊழல் ஆகியவற்றைத் தனது உள்ளார்ந்த கூறுகளாகக் கொண்டது. நெருக்கடிக்குள்ளாகும் ஒவ்வொரு தடவையும் எந்த அடித்தளத்தில் இது தன்னைக் கட்டமைத்துள்ளதோ அதன் உதவியோடோ தன்னை அது தகவமைக்கிறது. அவ்வகையில் இராணுவமும் சிங்கள-பௌத்த பேரினவாதமும் வாய்ப்பான கருவிகள் மட்டுமன்றி அவசியமானதும்.

இலங்கையின் தலைமைத்துவ நெருக்கடி இன்னும் சரியாகச் சொல்வதானால் தேசியவாதங்களின் பிரதிநிதித்துவ நெருக்கடியின் நீண்டகால இயலாமையே தேவதூதர்களை தமது தேசியவாதம் சார்ந்து இலங்கையர்கள் தொடர்ந்து தேடிவருகிறார்கள். பொருளாதார அடியாள்கள் இப்போது புதிதாக தேவதூதர்களாக வேடந்தரிக்கிறார்கள். அவ்வேடத்துக்கான அங்கீகாரத்தை வெற்றிகரமான வியாபாரி என்ற முகமூடியூடாகச் சிலர் வழங்குகிறார்கள். அவர்கள் சொல்வது போல அவர் வெற்றிகரதான வியாபாரி என்ற பொதுப்புத்தி மனநிலையில் எதிர்காலம் பற்றி நம்பிக்கை வைப்பார்களானால், வேட்டி பற்றிய கனாவில் இருந்த போது கட்டியிருந்த கோவணம் காணாமல் போகுங்கணம் என்ன செய்வதென்று உத்தேசிப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *