அரசியல்உள்ளூர்என் கண்களில்...

மாற்றத்தை நாம் எங்கிருந்து தொடங்குவது?

இன்று இலங்கையர்கள் வீதிக்கு இறங்கியுள்ளார்கள். போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலை நிறைத்திருக்கிறார்கள். தெய்வேந்திர முனை முதல் பருத்தித்துறை வரை, சங்கமன் கண்டி முதல் கற்பிட்டி வரை நாலாபக்கமும் இருந்து கோத்தாவை வீட்டுக்குப் போகச் சொல்லும் குரல்கள் ஆழமாகவும் கோபமாகவும் ஒற்றுமையுடனும் ஒலிக்கின்றன. ஆனால் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் காணவில்லை. ஒரு பொருளாதார நெருக்கடியின் விளைவினதாய் தோற்றம்பெற்ற போராட்டங்கள் இன்று அக்கட்டத்தைத் கடந்து ஒரு மக்கள் இயக்கமாக உருவாவதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுள்ளன. இந்த மாற்றமும் இலங்கையின் ஜனநாயக அரசியலின் அடித்தளமாய்க் கொள்ளப்படும் பாராளுமன்றின் இயலாமையும் இலங்கையின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் ஒளிக்கீற்றையும் அந்தகாரத்தையும் ஒருங்கே கோடுகாட்டுகின்றன.

கடந்த செவ்வாய்கிழமை, இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் ஊழல் எதிர்ப்பு குரல் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாட்டின் பலம் வாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையான அரசியல்வாதிகள் செய்த பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார். இதில் நாட்டின் பொதுச் செல்வங்களை பாரியளவில் கொள்ளையடித்த அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளின் மோசடிகள் மற்றும் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இவை இலங்கையில் நடைபெற்றுள்ள ஊழல்மோசடிகளின் மிகச்சிறிய பகுதி மட்டுமே. இதில் கட்சிவேறுபாடு இன்றி அனைவரும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளமை புலனாகிறது. குறிப்பாக மாற்றுச்சக்தியின் தலைவராகப் பலரால் கருதப்படும் சஜித் பிரேமதாவின் ஊழல்களும் ஜே.வி.பியால் அம்பலப்படுத்தப்பட்டன.

இலங்கையில் ஊழல்கள் தொடர்பில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்துள்ளபோதும் அவை பெரும்பாலான மக்களின் கவனத்தைப் பெறவில்லை. இப்போதைய சூழல் அதற்கு வாய்ப்பாயுள்ளது. இலங்கையில் ஊழல் நிறுவனமயப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும். இன்று ஜே.வி.பியின் அம்பலப்படுத்தல்களைக் கண்டு பொங்குவோர் பலர், இலஞ்சம் கொடுக்க மறுத்தவரை “உலக நடப்புப் புரியாதவர்” என்றும் வாங்க மறுத்தவரை, “வாழத் தெரியாதவர்” என்றும், ஊழலுக்குகெதிரான குரல்கொடுத்தவரையும் போராடியவரையும் “இடஞ்சல்காரன்” என்றும் சொல்லிக் கேலிசெய்தவர்கள்தான். இன்று எத்தனை இலங்கையர்களால் கம்பீரமாகத் தலையை உயர்த்தி “நான் இதுவரையும் இலஞ்சம் கொடுக்கவில்லை-வாங்கவில்லை” என்று சொல்லவியலும். மாற்றம் எம் ஒவ்வொருவரில் இருந்தும் தொடங்க வேண்டும்.

மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே கொள்கையடித்தது போலவும் ஜக்கிய தேசியக் கட்சியினர் யோக்கியவான்கள் போலவும் ஒரு தோற்றம் எழுப்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே சஜித் பிரேமதாச மாற்றுத் தலைவரான முன்வைக்கப்படுகிறார். சஜித் ஒரு பேரிடர் என்பதை இங்கு ஆணித்தரமாகப் பதிய விரும்புகிறேன். தனது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சராக சரத் பொன்சேகா இருப்பார் என்றும் இலங்கை சிங்கள-பௌத்த நாடு என்றும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். அவர் ஒரு பேரிடர் என்பதை இது போன்ற இன்னும் பல அண்மைக்கால நடத்தை தொடர்ச்சியாக உறுதி செய்கிறது. இன்றைய நெருக்கடிக்குத் தலைகளை மாற்றுவது குறித்தே நாம் பேசுகிறோம். சிந்திக்கிறோம். சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அனைவரும் இன்றைய நெருக்கடிக்குப் பொறுப்புக்கூற வேண்டும். அவ்வாறு இருக்கையில் அதே ஆட்களை மீண்டும் முன்மொழிவது என்ன மாதிரி டிசைன்?

பாராளுமன்றம், இலங்கை ஜனநாயகத்தின் காவலன் என்ற தகுதியை இழந்துவிட்டது. எமது பாராளுமன்றமும் அரசியலமைப்பும் எவ்வளவு ஏதேச்சாதிகாரமானது என்பதை பலர் வலியுறுத்தி வந்தாலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இலங்கை மக்களில் பெரும்பான்மையோரின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் பாராளுமன்றாலும் ஜனாதிபதியாலும் இதைச் சாத்தியமாக்கிய அரசியலமைப்பாலும் என்ன பயன். வாக்களிக்கும் அதிகாரத்துக்கு அப்பால் மக்களிடம் எதுவுமே இல்லை என்பதைத் தற்போதைய நெருக்கடி வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இப்போது அதிகாரம் யாரின் கைகளில் இருக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டுமா இல்லையா

இன்னமும் பாராளுமன்றத்திற்குள் தீர்வைக் கோரும், பாராளுமன்ற ஜனநாயகத்தின மூலம் அனைத்தையும் சாத்தியமாக்கலாம் என்று வேதம் ஓதும் சாத்தான்கள் எம்மிடம் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு முகமூடிகளுடன் வலம்வருகிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவை நம்முன்னே காணும் வாய்ப்பு இப்போது வாய்த்திருக்கிறது. மக்களை ஒடுக்கும் அடிப்படை உரிமைகளை மறுக்கும் சட்டங்களை ஏகபெரும்பான்மையோடு நிறைவேற்றிய பாராளுமன்றத்தின் மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவு முட்டாள்தனமானது. அதன்மீது நம்பிக்கை வைக்கச் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமானது. ஆனால் அதைப் பலரும் செய்கிறார்கள். “225பேரும் வீட்டுக்குப் போங்கள்” என்ற கோரிக்கை பலருக்கு அபத்தமாகப் படுகிறது. அக்கோரிக்கையில் நியாயம் இல்லை என்கிறார்கள். இன்று நெருக்கடி தொடங்கி 28 நாட்களாகிற நிலையில் இந்தப் பாராளுமன்றத்தால் என்ன செய்ய முடிந்தது?

கடந்த புதன்கிழமை பாராளுமன்றில் பேசிய நிதியமைச்சர் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் 2019ம் ஆண்டு வரிச்சலுகைகளை வழங்கியது தவறு என்று பேசியிருக்கிறார். கோத்தபாய ராஜபக்ச பதவிக்கு வந்தவுடன் வழங்கப்பட்ட வரிச்சலுகைகள் யாருக்கானவை என்று எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா? அவை செல்வந்தர்களும் பெருவியாபாரிகளுக்கும் பாரிய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன. அரசுக்கு வரவேண்டிய வரிப்பணம் செல்வந்தர்களின் பைகளை நிறைத்தது. வரிச்சலுகையில் மிகப்பெரிய பயனை அடைந்தவர்கள் அவர்களே. அதுகுறித்து எப்போதாவது பேசியிருக்கிறோமா? இப்போது அதிகரிக்க உத்தேசித்துள்ள வரிகள், யார்மீதானவை? இலங்கையில் இன்னமும் ஏன் செல்வந்த வரிகள் (wealth tax) குறித்துப் பேசப்படுவதில்லை.

இன்றைய நெருக்கடிக்குத் தீர்வுகளை முன்மொழிவோரில் பெரும்பான்மையானோர் செல்வந்தர்களிடம் மேலதிகமாக வரி அறவிடுவது பற்றிப் பேசுவதில்லை. மாறாக இலங்கையின் பொருளாதாரக் கட்டுமானத்தில் அடித்தளத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இலங்கை அரசு சமூகநலத்திட்டங்களுக்கு ஏராளமான பணத்தைச் செலவழிப்பதாலேயே பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறது என்று வாதிடுகிறார்கள். மத்திய-தர மனோநிலை கேட்டுக்கேள்வியின்றி இதை ஆமோதிக்கிறது. ஆனால் செல்வந்தர்கள் மீது ஏன் ஒழுங்கான வரிவிதிப்பு நடைபெறவில்லை என்ற கேள்வியை கேட்பதில்லை.

இலங்கையின் தேசியம் நாட்டுப்பற்று பற்றி இலங்கையின் பெருமுதலாளிகள் வாய்கிழியக் பேசுவதைக் காண்கிறோம். எல்லோரும் நாட்டில் இருக்க வேண்டும். இந்நெருக்கடி நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது தேசத்துரோகம். நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இந்நெருக்கடிகள் தற்காலிகானமாவை என்றெல்லாம் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறார்கள். ஆனால் பெருந்தொற்றைத் தொடர்ந்த நெருக்கடியின் போது இதே பெருமுதலாளிகள் தங்கள் மூலதனத்தை பிறநாடுகளுக்கு இடம்பெயர்த்தார்கள். இதுதான் அவர்களின் தேசப்பற்று. இந்த இடப்பெயர்வால் இலங்கையில் வேலையிழந்தவர்கள் பலர். ஆனால் அவர்கட்கு என்றுமே இலாபமே முக்கியமானது. இலாபத்துக்காகத்தான் இப்போதைய அரசுக்கும் அவர்கள் முட்டுக்கொடுத்தார்கள். அதே இலாபத்துக்காகத்தான் இப்போது போராட்டங்களுக்குச் சார்பாக அறிக்கை விடுகிறார்கள்.

அண்மையில் வெளியான அவுஸ்ரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆவணச்சித்திரம் ஹம்பாந்தோட்டை மருத்துவமனை அமைப்பதில் நடைபெற்ற ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இதில் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில் ஊழலின் பங்காளிகளாக வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளன என்பதாகும். இன்று இலங்கைக்கு நிதி வழங்குவோர் யார், அதற்கான நிபந்தனைகள் என்ன, அரசசொத்துக்கள் எவ்வாறெல்லாம் கைமாறுகின்றன போன்ற வினாக்கள் பதிலற்றுக் கிடக்கின்றன. ஏனெனில் நாட்டை நடாத்துவதற்கு எவ்வாறேனும் நிதியிருந்தால் போதும் என்ற மனநிலை பொதுமையாக்கப்பட்டுள்ளது. அதற்கு நெருக்கடி வாய்ப்பாயுள்ளது.

இவையனைத்தும் இலங்கை யாருக்கானது என்ற வினாவை எழுப்புகின்றன. இலங்கை மக்களுக்கானது. முக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு அப்பால் இலங்கையின் குடிமக்களாகச் செயற்படத் தவறியதன் விளைவுகளையே இன்று அனுபவிக்கிறோம் என்ற உண்மை விளங்க வேண்டும்.

இலங்கை வாக்காளர்கள் தங்களது நீண்ட அரசியல் உறக்கத்தில் இருந்து துயிலெழுவதற்கான வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது. இனியாவது தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளுக்கும் பிரச்சாரங்களுக்கு இரையாகி, வாக்களித்துவிட்டு வேடிக்கை பார்க்கும் கொடுங்காரியத்தை செய்யாமல் இருக்க வேண்டும். வாக்காளர் என்ற நிலையில் இல்லாமல் நாட்டின் குடிமக்களாக அரசியல் விழிப்புணர்வோடு நியாயங்களுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்புவோராக மாற்றமடைதல் வேண்டும். அதன் முதற்படியே இப்போது நாம் காணும் தொடர்ச்சியான போராட்டங்கள்.

அனைத்திலும் மேலாக சமூகப்பொறுப்புள்ளவர்களாக, சகமனிதன் மீது அக்கறைகொண்டவர்களாக குடிமக்கள் இருத்தல் வேண்டும். இது எளிமையாக, குப்பையை உரிய இடத்தில் உரிய முறையில் போடுவதில் தொடங்குகிறது. இன்று நாம் கோருகின்ற மாற்றம் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *