அரசியல்உலகம்

பிரெக்ஸிட்: மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்

வரலாற்றில் தனிமனிதர்களின் பாத்திரம் முக்கியமானது. பல வரலாற்று நிகழ்வுகளை தனிமனிதர்களின் செயல்களே தீர்மானித்து இருக்கின்றன. இது பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அனைத்துக்கும் பொதுவானது. வரலாறெங்கும் தனிமனிதர்கள் தேசங்களின் தலைவிதியை தீர்மானித்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு தேசத்தின் தலைவிதியை ஒருசிலர் தீர்மானிக்கிற நிகழ்வு இப்போது நடந்தேறுகிறது. இது மீண்டும் ஒருமுறை அரசியல் என்பதும் ஆட்சி என்பதும் இவ்விரண்டையும் நடாத்துகின்ற பாராளுமன்ற ஜனநாயகம் என்பதும் யாருக்காக, யாருடைய நலன்களைக் காப்பதற்காக இயங்குகிறது என்ற கேள்வியை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளிவருவதை குறிக்கும் பிரெக்ஸிட் இப்போது பேசுபொருளாகி உள்ளது. இது பிரித்தானிய பாராளுமன்ற ஜனநாயகத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான தேர்தல்களை 2016ம் ஆண்டு அன்றைய பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் நடத்தத் துணிந்தது முதல் பிரித்தானிய பாராளுமன்ற அரசியல் தொடர்ச்சியான ஆட்டங்களுக்கு உட்பட்டு வருகிறது. வெளியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து அளிக்கப்பட்ட பெரும்பான்மை வாக்குகள் பிரித்தானியாவில் ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன. பிரெக்ஸிட் கடந்த மூன்றாண்டுகளில் இரண்டு பிரதம மந்திரிகளைக் காவுகொண்டுள்ளது (பதவியிலிருந்து அகற்றியுள்ளது). இப்போது மூன்றாவது நபரையும் அகற்றுவதை நோக்கிய திசையில் பயணிக்கிறது. குழப்பமும் நிச்சயமின்மை திடீர் திருப்பங்களும் நிறைந்த திகில் கதையாய் பிரெக்ஸிட்; இப்போது நடக்கிறது. ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டோ அல்லது உடன்படிக்கை எட்டப்பாடமலேயோ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் காட்சிகள் கணத்திற்கு கணம் மாறுகின்றன. நாட்கள் நெருங்க நெருங்க கிளைமாக்ஸ் காட்சியை திரையரங்குகளில் எதிர்பார்த்துக் காத்திருப்பது போல பிரித்தானிய மக்கள் திக்கும்திசை தெரியாது விக்கித்தபடி எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பிரெக்ஸிட் நெருக்கடியின் இன்னொரு அத்தியாயம் கடந்தவாரம் அரங்கேறியது. புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த வாரம் முதல் ஐந்து வாரங்களுக்கு பாராளுமன்ற செயல்பாடுகளை நிறுத்தி பாராளுமன்றத்தை ஒத்தி வைக்குமாறு பிரித்தானிய முடியைக் கூறினார் இந்த கோரிக்கையை இராணி ஏற்றுக் கொண்டுள்ளார். இது பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்புகளுக்கும் கோபமான எதிர்வினைகளுக்கும் வழிகோலியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒரு திட்டத்தின் அடிப்படையில் வெளியேறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்மொழியப்பட்ட திட்ட வரைவுகள் தொடர்ச்சியாகப் பிரித்தானிய பாராளுமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில் பிரித்தானியா விரும்புகிற ஒரு திட்டத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட சாத்தியமில்லாமல் போய் விட்டது. இந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு மக்கள் அளித்த ஆணையை சிரமேற்கொண்டு எப்படியாவது ஒக்டோபர் 31 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் என்ற உறுதிமொழியை பிரித்தானிய பிரதமர் வழங்கியிருக்கிறார். அதை நோக்கிய நகர்வாகவே அவரது பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் திட்டம் அரங்கேறுகிறது.

பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கும் சதுரங்கம்
அண்மையில் பிரதமராகப் பதவியேற்ற ஜோன்சன் பிரித்தானிய பாராளுமன்றம் விரும்புகிற ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க மாட்டாது என்பதை நன்கறிவார். அதேவேளை எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை சாத்தியமாக்கி காட்டுவதன் மூலம் தனது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யலாம் என்பதையும் அவர் அறிவார். எனவே இதை சாத்தியமாக்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள வழி பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாகும். பிரித்தானிய பாராளுமன்ற வரலாற்றில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றம் சில காலம் ஒத்தி வைக்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய வரலாற்றில் முதன்முதலாக ஐந்து வாரங்களுக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’, ‘அரசியலமைப்பு சதி’ எனப் பலர் விமர்சிக்கிறார்கள். அதேவேளை முன்பே திட்டமிடப்பட்ட பாராளுமன்ற விடுமுறைக்கு மேலதிகமாக நான்கு நாட்களே பாராளுமன்றம் இடைநிறுத்தபடுவதாக பிரதமர் ஜான்சனின் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.

ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஏதாவது ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதையே பெரும்பான்மையான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களால் உடன் படக்கூடிய எந்த ஒரு உடன்பாட்டையும் வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை தயாராக இல்லை. இந்நிலையில் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கான முடிவை இரண்டு அடிப்படைகளில் பிரதமர் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் கோடைகால விடுமுறையின் பின்னர் பாராளுமன்றம் தொடங்கிய நிலையில் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையான காலப்பகுதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி மகாராணியின் உரையைக் கேட்க பாராளுமன்றம் கூடும். மகாராணியின் உரை மீதான வாக்கெடுப்பு அக்டோபர் 21 22-ம் தேதிகளில் நடக்கும். இதற்கிடையில் அக்டோபர் 17 18ஆம் திகதிகளில் இறுதிக்கட்ட பேச்சுக்காக பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்துக்கு பயணிக்கிறார். இந்த நிகழ்வு புதிய திட்டமொன்றை பிரித்தானிய பாராளுமன்றம் வரைந்து நிறைவேற்றுவதற்கான காலத்தை கிட்டத்தட்ட இல்லாமல் செய்யப்பட்டுவிட்டது. இது உடன்படிக்கை எட்டப்படாத பிரித்தானியாவின் வெளியேற்றத்தை சாத்தியமாகும். உடன்பாடில்லாத வெளியேற்றம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாரிய நெருக்கடிகளை உருவாக்கும். இதை அழுத்தமாக பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரித்தானியாவிற்கு சாதகமான உடன்படிக்கை ஒன்றை எட்ட முனைவதாக பிரதமர் தெரிவிக்கிறார். ஆனால் அதன் சாத்தியங்கள் குறைவு என்பதை அனைவரும் அறிவர். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு மகாராணியின் உரை மீதான வாக்கெடுப்பில் பிரதமர் ஜோன்சனைத் தோற்கடிப்பதன் மூலம் இன்னொரு பொதுத் தேர்தலை நோக்கி நகர்வது. அவ்வாறு நகர்ந்தாலும் அது பிரித்தானியாவின் வெளியேற்றத்தை தடுக்கப் போவதில்லை.

இதேவேளை ஜோன்சனின் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் தான் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்றவொரு தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் பிரதமர் ஜோன்சன் தான் மக்களின் ஆணைக்கு மதிப்பளிப்பதாகவும் எக்காரணம் கொண்டும் தேதியை தள்ளி போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்துடன் விடுக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பாராளுமன்றத்தில் மிககுறுகிய பெரும்பான்மையுடன் (ஒரு உறுப்பினர் பெரும்பான்மை) பதவியிலிருக்கும் ஜோன்சன் தனது பாராளுமன்ற பெரும்பான்மையை நேற்றுமுன்தினம் இழந்தார். அவரது கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்ததன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. இதற்கிடையில் பாராளுமன்றத்தை பொத்தி வைக்கும் நடவடிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முயல்கிறார்கள். ஒருபுறம் அவர்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளார்கள் இன்னொருபுறம் இனிவரும் காலப்பகுதியில் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பாராளுமன்ற கட்டுப்பாட்டிற்கு மாற்றுவதற்கு பகிரதப் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள். இவையெல்லாம் துரிதகதியில் மாறிமாறி நடக்கின்றன.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது திகதி நீட்டிப்பைப் பாராளுமன்றம் கோர அனுமதிக்கும் வாக்கெடுப்பில் ஜோன்சன் தோல்விகண்டுள்ளார். 328க்கு 301 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் திகதி நீட்டிப்பைப் கோரும் சட்டவரைபைப் பாராளுமன்றில் சமர்பிக்க அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிப்பை வழங்கக் கோருவது மீதான வாக்கெடுப்பு நடாத்தப்படும். அதேவேளை பிரதமர் மக்களே இதைத் தீர்மானிக்க வேண்டும், எனவே பொதுத்தேர்தலுக்கு தான் அழைப்பு விடுக்கப்பபோவதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒக்டோபர் 15ம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடாத்தத் திட்டமிடுவதாக அறியக் கிடைக்கிறது.

இந்த மொத்த இயங்குநிலை அவலம் யாதெனில் பாராளுமன்றங்களின் தாய் என அழைக்கப்படுகின்ற பிரித்தானிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இன்றைய உலக அரசியல் ஜனநாயகம் என்ற ஒரு கருப்பொருளை, அரசியல் விழுமியத்தை அப்பால் தள்ளிவிட்டு நகர்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். வலதுசாரி தேசியவாத அரசியலின் எழுச்சி இதை சாத்தியமாகியுள்ளது.

பிரித்தானியாவின் எதிர்காலம் குறித்த கேள்விகள்
இனி வரும் நாட்களில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் அடிப்படையான அறத்தையும் விழுமியங்களையும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட பாராளுமன்ற ஜனநாயகம் தனது தோல்வியை இன்னுமொருமுறை சந்தித்துள்ளது. இந்தத் தோல்வி பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய அடி என்பதை மறுப்பதற்கில்லை. இதன் தீய விளைவுகள் பிரித்தானியாவில் உள்ள சாதாரண உழைக்கும் மக்களையும் அவர் சார் நலன்களையும் பாதிக்கும்.

ஜனநாயகத்தின் மீது விழுகின்ற ஒவ்வொரு அடியும் தேசியவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு வலுவூட்டுகிறது. இது எஞ்சியிருக்கும் சமூக நலன்களையும் அடிப்படை உரிமைகளையும் மக்களிடம் இருந்து இலகுவாக பறித்துவிடும் செயலை செய்கிறது. சிக்கன நடவடிக்கைகள், இராணுவ மையப் போக்குகள், சுதந்திர வர்த்தகம் போன்ற ஆளும் அதிகார வர்க்கம் வேண்டி நிற்கின்ற ஒன்றை இறுதியில் பிரெக்ஸிட்; செய்து முடிக்கின்றது.

உடன்பாடு எட்டப்படாத வெளியேற்றத்திற்கு பிரித்தானியா தயாராக இருக்கிறது என்பதை அண்மையில் கசிந்த பிரித்தானிய அரசாங்க ஆவணம் காட்டி நின்றது. Operation Yellowhammer என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கி தொழிலாளர் உரிமைகளை பறித்து அதன் மூலம் பிரித்தானியா பொருளாதாரத்தை நிலைநிறுத்த முயல்கிறது.

2016ஆம் ஆண்டு தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க பிரெக்ஸிட் தேர்தலை நடத்த தான் தயாராக இருப்பதாக சொன்ன அந்நாள் பிரதமர் டேவிட் கமரன் பிரெக்ஸிட் வெற்றிபெறும் என எதிர்பார்க்கவில்லை. அதேபோல மூன்று ஆண்டுகளில் பிரெக்ஸிட் இப்படி ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கும் என்று அவர் கனவு கூட கண்டிருக்க மாட்டார். அதேபோன்றதொரு செயற்பாட்டையே இப்போது பிரதமர் ஜோக்சன் முன்னெடுக்கிறார்.இன்று பிரெக்ஸிட்; என்ற ஒற்றைச் சொல் பிரித்தானியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் ஒருபுறம் பிரித்தானிய அரசியலும் இன்னொருபுறம் ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் விக்கித்து நிற்கின்றன: காலத்தின் கைகளில் கதையைக் கையளித்துவிட்டு கைவிரித்தபடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *