அரசியல்உலகம்

பிரெக்ஸிட்: முட்டுச்சந்தியில் சிக்கிச் சிதறி

அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. அதன் விதிகளும் அவ்வாறே. அதைச் சரியாக ஆடத்தெரியாதவர்கள் ஆட்டத்தை மட்டுமன்றி அதன் தேசத்தையும் நெருக்கடியில் தள்ளிவிடும் அவலத்தை நிகழ்த்தி விடுவார்கள். குறிப்பாக ஒருதசாப்தகாலத்திற்கு முன்தொடங்கிய பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் நாடுகளும் நாடுகளின் கூட்டுகளும் தப்பிப்பிழைப்பதற்கான போராட்டத்தில் நண்பன், எதிரி என்ற வரையறையறைகள் எல்லாம் மீள்வரையறுத்துள்ள நிலையில் தேசங்களின் தப்பிப்பிழைத்தலே சவாலுக்குள்ளாகியுள்ளது. இதை கண்டு சார்ள்ஸ் டாவின் மட்டும் தனக்குள் சிரித்துக் கொள்வார் என்பதை நிச்சயம் நம்பலாம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அது குறித்த முடிவெதுவும் எட்டப்படாமல் பிரித்தானியா சிக்கிச் சீரழிகிறது. அதைச் சாத்தியமாக்க பிரித்தானியப் பிரமரதால் முன்மொழியப்பட்ட அவரது திட்டம் அவரது கட்சிக்குள்ளேயே பாரிய எதிர்ப்பைச் சந்தித்துள்ளது. இத்திட்டம் பாராளமன்றினால் தோற்கடிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த பிரிக்ஸிட் தொடர்பில் ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் பிரான்சும் ஜேர்மனியும் எதிர்வினையாற்றுக்கின்றன. இவை இந்த பிரிக்ஸிட்டின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பிரிக்ஸிட் தொடர்பில் இவ்வாறான நெருக்கடி பிரித்தானியாவில் தொடர்கையில் அதிதீவிர வறுமை மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அலுவலர் (United Nations Special Rapporteur on extreme poverty and human rights) பிலிப் அஸ்ட்டன் பிரித்தானியாவில் வறுமை அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அதிகரித்திருப்பதாகவும் அடிப்படியான சமூகப் பாதுகாப்புகளே பிரித்தானியாவில் இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாகவும் கடந்த வாரம் தனது 24 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது பிரித்தானிய எதிர்நோக்கும் சவாலின் நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதேவேளை பிரித்தானியா என்கிற பொருளாதாரச் சக்தியின் முடிவைக் கட்டியஞ் கூறுகிறது.

பிரெக்ஸிட் வரைபு அறிக்கை: யாருடைய தேவதை
2016ம் ஆண்டு யூன் மாதம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரித்தானிய மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து இந்த வெளியேற்றத்தைச் சாத்தியமாக்குவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள், இழுபறிகள், மிரட்டல்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள் என எல்லாவற்றையும் கடந்து பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்கிற நடைமுறைகளை உள்ளடக்கிய வரைபு இறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்த வரைபுக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் மந்திரிசபை உறுப்பினர்களிடையேயே உடன்பாடு எட்டப்படவில்லை. கிட்டத்தட்ட ஆறு மணிநேர மந்திரிசபைக் கூட்டத்தின் முடிவிலே இந்த வரைபுக்கான மந்திரி சபை ஒப்புதலை தெரேசா மே பெற்றார்.

அவ்வொப்புதலை அவர் பெற்றதாக அறிவிக்கப்பட்ட சில மணித்துளிகளில் எட்டப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு மனசாட்சியோடு ஆதரிக்க முடியாது என்று கூறி பிரெக்ஸிட் செயலாளர் டொமினிக் ராப் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து பிரெக்ஸிட் அலுவல்களுக்கான இளநிலை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேனும் பதவி விலகினார். அதேபோல எட்டப்பட்ட வரைபுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் எஸ்தர் மெக்வே-வும் பதவி விலகினார். இவை பிரமதர் மேயினால் தனது மந்திரிசபைச் சகாக்களிடமிருந்தே ஒப்புதலைப் பெறவியலாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்தப் பின்புலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டப்பட்ட இறுதி ஒப்பந்த வரைபுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரஸல்ஸ் நகரில் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கூஎ ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் நடாத்திய ஆலோசனைகளுக்கு பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டன. இதில் முக்கியம் யாதெனில் வாக்கெடுப்பு எதுவும் நடாத்தப்படாமலே ஏகமனதாக இவ்வொப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் இரண்டு ஆவணங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். முதலாவது ஆவணம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும்போது செய்யக் கடமைப்பட்டுள்ள செயல்கள் குறித்து விளக்கும் 585 பக்கங்கள் கொண்ட வெளியேற்ற ஒப்பந்தம். இரண்டாவது பிரித்தானியா வெளியேறிய பிறகு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியப ஆகியவற்றுக்கு இடையேயான உறவு எத்தகையதாக இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ள அரசியல் பிரகடனம். முதலாவது நீண்ட ஆவணத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 39 பில்லியன் ஸ்டேலிங் பவுண்ஸ் கொடுக்க வேண்டும். பிரித்தானியா குடிமக்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அடுத்தாண்டு மார்ச் 29ம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான நாளாக குறிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தினத்திற்குள் அதற்கான பணிகள் முடிவடைவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தென்படுகின்றன. இப்போது வரைபுக்கான ஒப்புதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கிடைத்துள்ள நிலையில் பிரித்தானியப் பாராளுமன்றம் அதற்கான ஒப்புதலை அடுத்த மாதம் வழங்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள நிலையில் அதைப் பெறுவது மிகக் கடினமாக இருக்கும் என்பதை பிரதமர் மே நன்கறிவார். அதேவேளை அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை அவரது கட்சியான பழமைவாதக் கட்சியே முன்னெடுக்கத் தயாராகின்றது. இதனாலேயே தன்னைப் பதவியிலிருந்து விலக்குவதால் பிரெக்ஸிட் என்ற உண்மையை இல்லாமல் ஆக்க முடியாது. எதிர்கட்சியான தொழிற்கட்சி ஆட்சிபீடம் ஏறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று மே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார்.

இந்த வரைபு பிரித்தானியப் பாராளுமன்றில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ள நிலையில் இப்போது இரண்டு சாத்தியப்பாடுகள் உள்ளன. ஒன்று பிரெக்ஸிட் தொடர்பான மீள் வாக்கெடுப்பு அல்லது இன்னொரு பொதுத்தேர்தல். பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சி பிரெக்ஸிட் மீதான மீள்வாக்கெடுப்பையே கோரி நிற்கிறது. பொதுத்தேர்தல் வருமிடத்து அதை வெற்றிகொள்வதற்கான உபாயம் பிளவுண்டு போயுள்ள தொழிற்கட்சியிடம் இல்லை என்பதை அதன் தலைவர் ஜெரமி கோர்பன் அறிவார். இதனாலே பிரெக்ஸிட் மீள்வாக்கெடுப்பதை தன்னைப் பலப்படுத்துவதற்கான களமாகக் காண்கிறார்.

இதேவேளை பிரித்தானியப் பிரதமர் மேயினால் உடன்பாடு எட்டப்பட்டுள்ள வரைபானது பிரித்தானியா – அமெரிக்க வர்த்தகத்திற்கு பாரிய தடையாக இருக்கும் என்று செவ்வாய்கிழமை குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வரைபானது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மிகவும் வாய்ப்பான வரைபு என்றும் மிகுந்த பக்கச்சார்பானது என்றும் குற்றஞ் சாட்டினார். இதற்கு பிரித்தானிய உடன்படுமிடத்து அது அமெரிக்க பிரித்தானிய வர்த்தக உறவில் பாரிய நெருக்கடிக்கும் பின்னடைவுக்கும் வழிகோலும் என ட்ரம்ப் எச்சரித்தார். இது ஆழமடையும் ஐரோப்பிய ஒன்றிய – அமெரிக்க வர்த்தகப் போரின் இன்னொரு களத்தை எடுத்துக்காட்டுகிறது. இதை விளங்க பிரெக்ஸிட் உருவான கதையை நோக்குதல் தகும்.

2008ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சந்தித்துக் கொண்டு வந்த நிலையில் ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும் ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு அடுத்த பெரிய பொருளாதாரமாகவும் உள்ள பிரித்தானியாவுக்கு வாய்ப்பானது என்ற எண்ணத்தின் விளைவாகவே பிரெக்ஸிட் தோற்றம் பெற்றது. அதை நடைமுறைப்படுத்திய முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரன் 2016 சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துவதன் அவசியத்திற்கான மூன்று தேவைகளை முன்மொழிந்தார். முதலாவது ஐரோப்பிய நாணயமாக யூரோ வீழ்ச்சியடைவதானது மொத்த ஒன்றிய உறுப்பு நாடுகளின் பொருளதாரத்தை பாதிக்கிறது. எனவே விலகுவது இப்பாதிப்பில் இருந்து தப்பிக்கொள்ள வாய்ப்பானது. இரண்டாவது இவ்வாக்கெடுப்பானது ஏனைய ஐரோப்பிய சக்திகளுடன், அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியுடன், இங்கிலாந்தின் பேரம்பேசும் இடத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வழிவகையாகும். மூன்றாவது அமெரிக்காவுடனான கட்டற்ற வர்த்தகத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை தடையாக உள்ளது.

பிரெக்ஸிட் கட்டற்ற சுதந்திர வர்த்தகத்திற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு வழிசேர்த்துள்ளது என அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் அதன் வர்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்தும் நேரடியான தாக்குதல்களைத் தொடுத்தனர். ஆனால் பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக, ஜேர்மனியும் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்காக பிரித்தானியாவிற்கு எதிரயாக ஒரு கடுமையான போக்கை எடுத்தன. அதன் நிலைப்பாடுகள் இறுதிசெய்யப்பட்டுள்ள பிரித்தானிய வெளியேற்ற வரைபில் பிரதிபலித்தன. ஜேர்மனியும் பிரான்சும் இதன் வழி அமெரிக்காவிற்கு எதிரான தமது கரத்தைப் பலப்படுத்த முனைந்துள்ளன.

வெளியேற்றத்தை ஆதரிக்கும் பிரித்தானிய அரசியல் அடுக்குகள் ஐரோப்பிய சந்தைகளை தடையின்றி அணுகுவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் சர்வதேச அளவில் சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கைகளை பேரம்பேசுவதற்கான உரிமை என்கிற திறந்த சந்தையின் அடிப்படை விதிகளின் மீது அழுத்தி நின்று பிரித்தானியாவுக்கு வாய்ப்பான வெளியேற்றத்தைச் சாத்தியமாக்கலாம் என நம்பினார்கள். அது அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அதீத நம்பிக்கை உடையாத இருந்தது. கடந்த 18 மாதங்களாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் கூட அவ்வாறதொன்றுக்குத்தான் முயன்றார். ஆனால் பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அதிகரித்து வரும் முரண்பாடுகளையும் வர்த்தகப் போட்டியையும் களமாக்கியது. இதன் துர்விளைவுகளை பிரித்தானியாவே அனுபவிக்க வேண்டி வரும் என்பதை எட்டப்பட்ட வரைபு குறிகாட்டுகிறது. இதன் பின்னணியிலே அமெரிக்க அதிபரின் நேற்று முந்தைய கருத்துக்களை நோக்க வேண்டும்.

பிரித்தானியர்களின் பரிதாபம்
ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யமாக இருந்தவொரு தேசம் பசியிலும் பட்டினயிலும் வறுமையிலும் இருக்கிறது என்ற உண்மையை ஏற்கவே கடினமாக இருக்கக் கூடும். ஆனால் இந்தச் சுடும் உண்மையைச் சொல்லியிருப்பது ஐக்கிய நாடுகள் சபை. புpரித்தானியாவின் பிரபல பகுதிகளான லண்டன், ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட 9 பெருநகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு தனது அறிக்கையை ஐ.நாவின் பிலிப் ஆஸ்டன் கடந்த 16ம் திகதி வெளியிட்டுள்ளார்.

அதில் பிரித்தானியர்களில் ஐந்தில் ஒருவர், தொகையின் அடிப்படையில் 14 மில்லியன் பேர், வறுமையில் வாழ்கின்றனர். நான்கு மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் 50 சதவீதத்திற்கும் கீழே உள்ளனர். ஒன்றரை மில்லியன் பேர் ஆதரவின்றி கைவிடப்பட்டுள்ளனர் என்ற தரவுகளை வெளியிட்டு பிரித்தானியர்களை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். குறிப்பாக உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தின் இலட்சணம் சந்தி சிரித்தது. ஆதேவேளை வளங்களும் நிதிமூலதனமும் எவ்வாறு ஒரு சிலரின் கைகளிலேயே கிடக்கிறது என்பதற்கு பிரித்தானியவை விட நல்லதொரு உதாரணம் இருக்கமுடியாது என்பதும் புலனானது.

ஆஸ்;டனின் அறிக்கை சொல்கிற விடயங்கள் ஒரு பொருளாதார வல்லரசு எப்படி இருக்கிறது என்பதை மட்டுமல்ல பொருளாதார வல்லரசுக் கனவுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதற்கும் நல்ல உதாரணமாகும்.

ஒரு சமூக நல அரசின் தேய்வும் நவதாரளவாதத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தலும் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. சமூக செலவின வெட்டுக்கள் என்பது வெறுமனே பொருளாதார சூழல்களால் தீர்மானிக்கப்படவில்லை மாறாக தீவிர சமூக மீள்வடிவமைப்புக்கான ஓர் அரசியல் திட்டநிரலால் உந்தப்படுகிறது என்று அஸ்டன் சொல்கிறார். அடுத்தடுத்து வந்த பிரித்தானிய அரசாங்கங்கள் பிரித்தானிய மக்களுக்கு குறைந்தபட்ச அளவில் நியாயம் மற்றும் சமூக நீதி இரண்டையும் வழங்கும் முறைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இது சமூக நல அரசு என்ற நிலையை பிரித்தானியா இழக்க வழி வகுத்துள்ளது.

இங்கிலாந்தின் உள்ளாட்சிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக அரசின் நிதியுதவிகளில் பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, 2010 மற்றும் 2018 க்கு இடையே 500 க்கும் அதிகமான குழந்தைகளுக்கான பராமரிப்பு மையங்களும், 2010 மற்றும் 2016 க்கு இடையே 340 க்கும் அதிகமான நூலகங்களும் மூடப்பட்டுள்ளன. வீடற்றநிலை 2010 க்குப் பின்னர் 60மூ வரை அதிகரித்துள்ளது, வீடுகள் அற்ற நிலையில் வீதிகளிலும் கிடைக்கும் இடங்களிலும் படுத்துறங்குவோர் எண்ணிக்கை 134 சதவீதம் அதிகரித்துள்ளது. சமூக வீட்டுவசதி திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் 1.2 மில்லியன் பேர் காத்திருக்கின்ற நிலையில் கடந்த ஆண்டு 6,000க்கும் குறைவான வீடுகளே கட்டப்பட்டன.

இவை வெறுமனே 2008ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் விளைவுகளல்ல. அதையும் தாண்டி உள்ளாந்த நிதிமூலதனக்குவிப்பு, நவதாரளவாதம் ஆகியவற்றின் விளைவுகள் என்பதை அறிக்கை தெளிவுபடுத்துகிறது. பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த போது 29 ஆக இருந்த இலவச உணவு வினியோக கூடங்கள் இப்போது 2,000மாக அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் இது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

புpரித்தானியா பற்றிய இவ்வறிக்கை பிரிக்ஸி;ட்டின் சமூக முக்கியத்துவத்தை முன்தள்ளியுள்ளது. பிரித்தானியா வெளியேறினாலும் இல்லாவிட்டாலும் பிரித்தானியா தனது சிக்கன நடவடிக்கைகளையும் வேலை இழப்புக்களையும் தொடரத் தான் போகிறது. சாதாரண மக்களும் தொழிலாளர்களுமே இதன் துர்விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் இவை பொது வெளியில் பேசப்படுவதில்லை. மாறாக அமெரிக்கா எதிர் ஐரோப்பிய ஒன்றியப் போட்டியின் சர்வதேச களமாகும் பழமைவாதக் கட்சி எதிர் தொழிற்கட்சி என்ற உள்நாட்டு அரசியல் களமாகவும் பிரெக்ஸிட் சுருக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன நடக்கும் என்ற நிச்சயமின்மை நிச்சயம் என்பதே பிரெக்ஸிட்டின் இப்போதைய நிலை. பிரெக்ஸிட் இன்று உலக அளவில் பொருளாதார ரீதியில் அதிகரித்து வரும் நெருக்கடிகளைக் கோடுகாட்டுகின்றன. சிறிய பொருளாதாரங்கள் மட்டுமல்ல பெரிய பொருளாதாரங்களும் சிக்கிச் சீரழிகின்றன என்பதற்கு பிரித்தானியா நல்லதொரு உதாரணம். இன்னொரு சர்வசன வாக்கெடுப்போ அல்லது பொதுத்தேர்தலோ இந்த நெருக்கடியைத் தீர்க்கப் போதுமானதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *