அரசியல்இலக்கியம்உலகம்கட்டுரைகள்

நோபெல் பரிசுகள் 2019: எதிர்பார்ப்புக்கள்?

இந்தவாரம் நோபெல் பரிசு வாரம். நோபெல் பரிசுகளுக்கு எப்போதுமே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. பல்வேறு துறைசார்ந்து வழங்கப்படுவதாலும் இலக்கியமும் அரசியலும் அதன் பகுதியாய் இருப்பதும் அப்பரிசுகளுக்கு ஒரு முக்கிய இடத்தை வழங்கியுள்ளது. இன்று இலக்கியத்துக்கான பரிசும் நாளை சமாதானத்திற்கான பரிசும் வழங்கப்படவுள்ளன. நோபெல் பரிசுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்படும் பேசப்படும் விருதுகளாக இவை இரண்டுமே இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்பு இம்முறையும் ஏற்பட்டுள்ளது.

இம்முறை இவ்விரண்டு பரிசுகளும் சில காரணிகளால் முன்னெப்போதையும் விட முக்கியம் பெறுகின்றன. இலக்கியத்துக்கான நோபெல் பரிசைத் தெரியும் சுவீடிஸ் அக்கடமியின் உறுப்பினர்களில் ஒருவரின் கணவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்க கடந்தாண்டு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்படவில்லை. எனவே இம்முறை 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

உலகம் நெருக்களினால் சூழப்பட்டு போரின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் ஈரான் மீதான நெருக்குவாரங்கள், அமெரிக்காவின் வர்த்தகப் போர், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதட்டம், காலநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள், அகதிகள் நெருக்கடி எனப் பலபத்துப் பிரச்சனைகள் உள்ளன. இதன் பின்னணியிலேயே நாளை சமாதானத்திற்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது.

இலக்கியத்துக்கான நோபெல் பரிசுகள்
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், சமாதானம் என ஐந்து துறைகளுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டாலும் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பவை இலக்கியத்துக்கும் சமாதானத்திற்கும் வழங்கப்படும் பரிசுகளே. இலக்கியத்துக்கான நோபெல் பரிசின் வரலாறும் மிகவும் சுவையானது. இதுவரை 114 பேர் இப்பரிசைப் பெற்றிருக்கிறார்கள். அதில் 14 பெண்களே உள்ளடங்குகிறார்கள். அப்பதின்னான்வரில் 8 பேர் 1990ம் ஆண்டுக்குப் பின்னான காலப்பகுதியில் பரிசைப் பெற்றவர்கள். அவ்வகையில் இப்பரிசுக்குப் பெரும்பாலும் ஆண்களே தெரியப்படுகிறார்கள். பால்ரீதியான வேறுபாடு சுவீடிஸ் அக்கடமியால் காட்டப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் உண்டு.

இப்பரிசு பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளிலேயே எழுதப்படுபவர்களுக்கே வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இலக்கியத்துக்கான நோபெல் பரிசின் 119 ஆண்டு கால வரலாற்றில் வெறும் 8 பேர் மட்டுமே ஐரோப்பா அல்லாத மொழியில் எழுதி பரிசைப் பெற்றவர்கள். இதில் வங்காளி மொழியில் எழுதிய ரவீந்திரநாத் தாகூர் முதன்மையானவர். இதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் தலா இருவர், அராபிய மொழி, ஹிப்ரு மொழி மற்றும் துருக்கி மொழியில் தலா ஒருவர். இப்பரிவை இறுதியாக வென்ற ஐரோப்பிய மொழிகளில் எழுதாதவர் துருக்கியின் ஓமன் பாமுக் ஆவார். இவர் 2006ம் ஆண்டு இப்பரிசை வென்றார். எனவே இப்பரிசு பெரும்பாலும் ஐரோப்பியர்களுக்கும் ஐரோப்பிய மொழிகளில் எழுதியவர்களே வென்றிருக்கிறார்கள்.

இப்பரிசை வென்றவர்களின் சராசரி வயது 65. எனவே வயதானவர்களுக்கே இப்பரிசு கிடைக்கிறது. இப்பரிசை இளம்வயதில் வென்றவர் ருடியாட் கிப்பிலிங் (Rudyard Kipling). இவர் தனது The Jungle Book நூலுக்காக தனது 41வது வயதில் இப்பரிசை வென்றிருக்கிறார். இப்பரிசுக்கு பலதடவைகள் பரிந்துரைக்கப்பட்டு பரிசு கிடைக்காமல் போனவர்கள் பலர். ஊலகின் முக்கியமான பல படைப்பாளிகளுக்கு இவ்விருது கிடைக்கவில்லை. இதில் குறிப்பாக ஆங்கில கவிதையுலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ரொபெர்ட் புரொஸ்ட் (Robert Frost), 20ம் நூற்றாண்டு இலக்கியத்தின் தவிர்க்கவியலாத ஆளுமையான பிரான்ஸ் கஃகா (Franz Kafka), ‘பொம்மை வீடு’ உட்பட ஏராளமான முற்போக்கான நாடகங்களைத் தந்த நோர்வேயின் ஹென்ரின் இப்சன் (Henrik Ibsen) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதைவிட முக்கியமான சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களான லியோ டால்ட்டாய், மார்க்சிம் கார்க்கி ஆகியோருக்கும் இப்பரிசு வழங்கப்படவில்லை.

இந்தப் பின்புலத்திலேயே இவ்வாண்டுக்குரிய பரிசுகளை நோக்க வேண்டியுள்ளது. அவ்வகையில் இரண்டு பரிசுகளில் ஒன்று பெண் ஒருவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை ஐரோப்பியர் அல்லாத ஒருவருக்கும் பரிசு கிடைக்க வாய்ப்புண்டு. அவ்வகையில் ஐரோப்பியரில்லாத பெண் ஒருவருக்கும் இன்னொரு ஐரோப்பியருக்கும் இப்பரிசு கிடைக்கலாம் அல்லது ஐரோப்பியப் பெண் ஒருவருக்கும் ஐரோப்பியரல்லாத ஆண் ஒருவருக்கும் இப்பரிசு கிடைக்கலாம்.

குடந்தாண்டு தனது நன்மதிப்பை சுவீடிஸ் அக்கடமி இழந்ததன் விளைவால் இம்முறை தெரியப்படுபவர்களை அதைக் காரணம் காட்டி பரிசை ஏற்க மறுக்கக்கூடாது என்பதில் பரிசுக்குழு மிகுந்த கவனமாக இருக்கும். அதேவேளை கடந்தாண்டு நிகழ்வுகளின் விளைவால் மாற்று நோபல் இலக்கியப் பரிசொன்று கடந்தாண்டு தனியாக உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்பரிசை வென்றவர் கரீபியத் தீவுகளில் ஒன்றான குவாட்டலூப்பைச் (Guadeloupe) சேர்ந்த மரீஸ் கொண்டே (Maryse Condé). அவருக்கு இவ்வாண்டுக்கான பரிசு கிடைக்கும் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால் கடந்தாண்டுக்குரிய மாற்றுப் பரிசை அவர் பெற்றமையால் அவருக்கு இப்பரிசு வழங்கப்படாது என எதிர்பார்க்கலாம். அதேபோல கடந்தாண்டுக்குரிய மாற்றுப் பரிசுத் தெரிவில் முன்னிலையில் இருந்தவர் ஹருக்கி முரகாமி. இவர் கடந்தாண்டு தன்னைப் பரிசுக்குத் தெரிவுசெய்ய வேண்டாம் எனக் கோரியிருந்தார். இதனால் அவருக்கு இம்முறை பரிசுக்கு வாய்ப்புண்டு.

இம்முறை இப்பரிசு கிடைக்கும் எதிர்பார்க்கபடுவபவர்களில் கனடியப் பெண் கவிஞர் ஆன் காஸன் (Anne Carson), சீனப் பெண் நாவலாசிரியர் கான் சூ (Can Xue), ரஷ்யப் பெண் நாவலாசிரியர் லுட்மீலா உலிட்ஸ்கயா (Lyudmila Ulitskaya) ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பத்தாண்டுகளாக இப்பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு பெயர்கள் உண்டு. அவர்களில் ஒருவருக்கேனும் விருது கிடைத்தால் மகிழ்ச்சி. இருவரும் ஐரோப்பியர்களுமல்ல, ஐரோப்பிய மொழிகளில் எழுதுபவர்களும் அல்ல. அதில் ஒருவர் கென்ய நாட்டு எழுத்தாளரான நூகி வா தியாங்கோ, மற்றவர் சிரிய நாட்டுக் கவிஞரான அடோனிஸ்.

சமாதானத்திற்காக நோபெல் பரிசு 2019
இவ்வாண்டு இப்பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது. இவ்வாண்டு பரிசை அனேகமாக வெல்வார் எனப் பலர் எதிர்கூறும் நபர் காலநிலை மாற்றத்ததிற்கெதிராக தொடர்ந்து குரல்கொடுத்து பல மேற்குலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 16 வயது நிரம்பிய கிரேத்தா துன்பேர்க் (Greta Thunberg). இன்று ஊடகங்களால் பரபரப்பாகப் பேசப்படும் ஒருவராக இச்சிறுமி மாறியுள்ளார். இவரது தொடர்ச்சியான போராட்டத்தின் முக்கியத்துவமும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவர் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் முக்கியமானது. அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எடுத்துச் செல்கின்ற மகத்தான பணியை இவர் ஆற்றுகிறார். ‘எங்களது எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்ற அவரது கேள்வி இன்று ஆட்சியில் இருப்போரையும் மற்றோரையும் முகத்தில் அறைகிறது. அவரது சங்கடமான கேள்விகள் அதிகாரத்தில் இருப்போரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இது மறுக்கவியலாதது.

பெரும்பாலும் இவ்வாண்டுக்கான நோபெல் பரிசு கிரேத்தா துன்பேர்க்க்குக் கிடைக்காது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் அவரது வயது. 16 வயதுடைய ஒருவருக்கு இவ்விருதை வழங்க பரிசுக்கமிட்டி தயாராக இராது. சுpல வருடங்களுக்கு முன் இதேபோல மலாலா யூசுவ்சாயிற்கு இப்பரிசை வழங்க முடிவுசெய்தபோதும் அதைத் தனியே அவருக்கு வழங்காமல் இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தியாத்திரிக்கும் சேர்த்தே வழங்கி இந்தியா-பாகிஸ்தான் என்று கதைவிட்டது கமிட்டி.

இனி இவ்வாண்டுரிய பரிசு யாருக்குக் கிடைக்கலாம் என்ற எதிர்வுகூறலுக்கு வருவோம். இவ்வாண்டுப் பரிசுக்கு 301 பரிந்துரைகள் கிடைத்துள்ளன. இதில் 223 தனிநபர்களும் 78 அமைப்புக்களும் அடங்கும். இவ்வாண்டு பரிசு மீது எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பை உருவாக்கியோர் இருவர். ஒருவர் கிரேத்தா துன்பேர்க். இன்னொருவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்ப் இவ்வாண்டு பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தமைக்கு அவருக்கு இப்பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. வலதுசாரி வட்டங்களில் இருந்து ட்ரம்ப் ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக நோர்வேயில் வீசுகின்ற வலதுசாரி அலை அவருக்கான ஆதரவை அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே பரிசுக்கான ஒருவரைத் தெரிய வேண்டிய தேவை நோபெல் பரிசுக் கமிட்டிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு வழிகளில் ஒன்றை பரிசுக் கமிட்டி தெரியும் என எதிர்பார்க்கின்றேன். முதலாவது நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஏதாவதொரு அமைப்புக்கு விருதை வழங்கி தப்பித்துக் கொள்கிற வழமை உண்டு. ஏனெனில் அமைப்புக்கள் பாதுகாப்பான தெரிவு. விமர்சனங்கள் கண்டனங்கள் இல்லாமல் கடந்து செல்லக்கூடிய தெரிவு அது. குறிப்பாக கடந்த தசாப்தத்தில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது (2017,2015,2013,2012) அமைப்பு ஒன்றுக்கு இப்பரிசு சென்றுள்ளது. எனவே அவ்வகையில் அமைப்பொன்றுக்கு இப்பரிசு அறிவிக்கப்படலாம்.

அவ்வாறு அறிவிக்கப்பட்டால் அப்பரிசை வெல்லக்கூடியவர்கள் என நான் எதிர்வுகூறுவது இரண்டு வகைப்பட்ட அமைப்புக்கள். முதலாவது எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு. ஊடக சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இதுவரை நோபெல் சமாதானப் பரிசின் கவனம் பெற்றதாக இல்லை. ஆனால் இதன் முக்கியத்துவம் இன்று உணரப்படுகிறது. அதேவேளை உலகளாவிய ரீதியில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கிறார்கள். எனவே அவர்களது பணி அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறது. அதேவேளை தற்போதைய நோர்வேஜிய அரசாங்கமும் இதிவ் கவனம் குவிக்கிறது. இப்பின்னணியில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்புக்கு பரிசு வழங்கப்படக்கூடும். அல்லது ஊடகத்துறை சார்ந்து இயங்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவுக்குக் (Committee to Protect Journalists CPJ) கிடைக்கலாம்.

இரண்டாவது வகை அமைப்புக்கள் அகதிகளுக்காகப் பணியாற்றும் அமைப்புக்கள். உலகளாவிய ரீதியில் அகதிகள் பிரச்சனை பாரிய பிரச்சனையாகியுள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவராண்மை (United Nations High Commissioner for Refugees-UNHCR). சர்வதேச மீட்புச் சபை (International Rescue Committee) என்பன முன்னிலையில் இருக்கின்றன.

இறுதியாக இப்பரிசை வெல்லக்கூடிய தனிமனிதர்கள் யார் என்று நோக்கினால் முன்னிலையில் இருப்பவர் எதியோப்பிய ஜனாதிபதி அபி அகமட். அவர் பதவியேற்றவுடன் எரிட்ரியாவுடன் இருந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை ஏற்படுத்தினார். அதேவேளை எதியோப்பியாவில் முன்னேற்றகரமான கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். எனவே அவருக்குப் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஆதற்குக் குறிப்பாக மூன்று காரணிகள் உண்டு. முதலாவது, அவருக்கு வழங்கப்படும் பரிசு நேரடியாகவே சமாதானத்துடன் தொடர்புபட்டது. எனவே சர்ச்சைகள் அற்றது. இரண்டாவது, இவ்விரு நாடுகளுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் நோர்வே முக்கிய பங்காற்றியுள்ளது. அவ்வாறு பங்காற்றி சமாதானம் எட்டப்பட்ட நாடுகளிற்கு சமாதானத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-பலஸ்தீனம் (1994), மார்த்தி அர்த்தசாரி (2008), மனுவல் சந்தோஸ் (2016) என்பது சில.

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் 2016ம் ஆண்டு கொலம்பிய அரசாங்கத்துக்கும் ஃபார்க் போராளிகளுக்கும் இடையில் எட்டப்பட்ட சமாதானத்திற்கு பரிசு கொலம்பிய ஜனாதிபதிக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அவ்வாறே இம்முறையும் நிகழுமா அல்லது சமாதானத்தை எட்டிய எரிட்ரிய ஜனாதிபதி இசைஸ் அவ்வேர்க்கியுக்கும் சேர்த்தே பரிசு வழங்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *