அரசியல்உலகம்

துருக்கிப் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்

உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும் பொருளாதார நெருக்கடி என்பது உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசுகளும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுனர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும் உலக நிலவரங்கள் பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையைத் தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன. அதேவேளை இந்நெருக்கடி தனியே ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை மாறாக பல நாடுகளைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது. இவை பொருளாதார நெருக்கடியின் தெரியாத பக்கங்களையும் மறைக்கப்பட்ட தொடர்புகளையும் அம்பலப்படுத்துகின்றன. இவை பொருளாதாரக் கட்டமைப்பின் கோலங்களைக் கட்டவிழ்க்கின்றன.

சில வாரங்களுக்கு முன் அமெரிக்கா துருக்கிய உருக்கு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க இறக்குமதி வரிகளை முறையே 50 சதவீதம் மற்றும் 20 சதவீதமாக இரட்டிப்பாக்கியது. இந்நடவடிக்கை, ஏற்கனவே பல மாதங்களாக வீழ்ச்சி அடைந்து வரும் துருக்கிய நாணயமாக லீராவின் மதிப்பு தடாலடியாக 20 சதவீத வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றதோடு  பணவீக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளது. இதேவேளை துருக்கிய லீராவின் வீழ்ச்சி இந்திய ரூபாயில் பாரிய வீழ்ச்சியை உருவாக்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய ரூபாயில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாக இது இருந்தது. துருக்கிய நாணயத்தின் சரிவுக்கும் அது இந்திய நாணயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு. ஆமெரிக்கா துருக்கி மீது ஏன் பொருளாதார தடைகளை விதிக்கிறது. இவை ஆராயப்பட வேண்டிய வினாக்கள்.

அமெரிக்கா துருக்கி மீது முன்னெடுத்துள்ள பொருளாதார யுத்தம் பல்வேறு முகங்களையும் காரணிகளையும் உடையது. நீண்டநாட்களாக அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக துருக்கி இருந்து வருகிறது. குறிப்பாக சிரியா மீதான யுத்தத்தை அமெரிக்கா தொடங்கியபோது அதன் பிரதான கூட்டாளி துருக்கி. மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கத்துக்குச் சவாலான ஒரு நாடாக துருக்கி தன்னை நிலைநிறுத்துகையில் அதற்கான பூரண ஆதரவை அமெரிக்காவே வழங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் துருக்கியின் முயற்சிகள் கைகூடாத போதும் நேட்டோவில் துருக்கியை அரவணைத்து சீராட்டிப் பேணிய நாடு அமெரிக்கா. நேட்டோ கூட்டணியில் உள் வேறெந்தவொரு உறுப்பு நாட்டையும் விட துருக்கியில் தான் அதிக அமெரிக்க படைகள் நிலைகொண்டுள்ளன.

இப்பின்னணியில் துருக்கியோடு அமெரிக்காவுக்கு பிரச்சனை என்னவென்றால் துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் இன்னொரு ஓட்டோமன் பேரரசைக் கட்டுவதற்கான எண்ணத்தைக் கொண்டிருந்தார். தன்னை ஒரு பேரரசர் போல கருதினார். மக்களிடையே அவருக்குள்ள செல்வாக்கும் மீண்டும் ஜனாதிபதியாகி அரசியலமைப்பை மாற்றியமைத்து சர்வாதிகாரியாக அவர் மாறினார். அதுவும் அமெரிக்காவுக்குப் பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருக்க எர்டோகன் விரும்பவில்லை. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் நல்லுறவு பேணுவது அவசியம் என்பதை உணர்ந்து அந்நாடுகளின் உதவியை நாடத் தொடங்கினார். இது சிரியப் போரில் அமெரிக்கத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுத்தது. ஆமெரிக்கா இதற்கு பழிவாங்கும் நோக்கில் துருக்கியில் தனிநாட்டுக்காகப் போராடிவரும் குர்தியர்களுக்கு ஆயுதமும் நிதியுதவியும் வழங்கியது. இதனால் துருக்கிய இராணுவத்திற்கு எதிராகப் போரிடும் குர்தியர்கள் அமெரிக்க ஆதரவுடன் முன்னேறத் தொடங்கினர். இது துருக்கிக்கு சிக்கலானதாக மாறியது.

இதேவேளை துருக்கியில் ஆட்சிமாற்றம் அவசியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது. அல்லாவிடின் துருக்கி அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாக மாறும் என அஞ்சியது. இதன் விளைவால் துருக்கிய ஜனாதிபதி எர்டோகனைப் பதவியிலிருந்து தூக்கியெறிய 2016 யூலை மாதம் இராணுவச் சதியொன்றை அரங்கேற்றியது. இதில் 300 பேர் கொல்லப்பட்டதோடு 2,100 பேர் படுகாயம் அடைந்தனர். பல்வேறு அரச கட்டடிங்கள் மீது குண்டு வீசப்பட்டது. இறுதியில் சதி தோல்வியடைந்தது.

இச்சதியை நடாத்துவதில் அமெரிக்காவின் நேரடிப் பங்கு அறியப்பட்ட நிலையில் அமெரிக்க – துருக்கி உறவுகள் சீரழியத் தொடங்கின. இச்சதியை ஒழுங்கமைத்தவர்களுக்கு உடந்தையாக இருந்த ஏவாஞ்சலிக்கல் அமெரிக்க மதபோதகர் ஆண்ட்ரூ புரூசன் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார். இதை வன்மையாகக் கண்டித்த அமெரிக்கா அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரியது. இக்கோரிக்கையை துருக்கி நிராகரித்தது.

இதேவேளை இச்சதியைத் திட்டமிட்டு நடாத்தியவர் என்று துருக்கி குற்றஞ்சாட்டுகிற மதபோதகர் பத்துல்லா குல்லன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவரது ‘குல்லன் இயக்கம்’ துருக்கியில் செல்வாக்குள்ள அமைப்பாகும். இவ்வமைப்பே சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றியது என்று துருக்கி அரசாங்கம் சொல்கிறது. குல்லனை துருக்கிக்கு அனுப்புமாறும் சதியில் அவரின் பாத்திரம் தொடர்பில் விசாரணை நடைபெறவேண்டியுள்ளது என்றும் அமெரிக்காவிடம் துருக்கி கோரியது. இக்கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்தது.

இப்பின்னணியிலேயே போதகர் புரூசனின் விடுதலையை மையப்படுத்தி துருக்கிக்கெதிரான அமெரிக்க நகர்வுகள் நடக்கின்றன. துருக்கி மீது தடைவிதிக்கப்பட்ட நிலையில் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி  “நிர்வாகம் இந்த விடயத்தில் முற்றிலும் உறுதியாக நிற்க இருக்கிறது. மதகுரு புரூன்சனை நாட்டிற்குத் திரும்ப கொண்டு வர ஜனாதிபதி நூறு சதவீதம் பொறுப்பேற்றுள்ளார், அடுத்த ஒருசில நாட்களில் அல்லது ஒரு சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.

இன்னொரு வகையில் புரூன்சன் விடயத்தில் கடும்போக்கைப் பின்பற்றுவதாகக் காட்டுவதன் மூலம்  கிறிஸ்துவ வலது அடித்தளத்தின் ஆதரவை ட்ரம்ப் பெற்றுக் கொள்வதோடு தனது  உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இதை வாய்ப்பாக்குகிறார். போதகர் விடயத்தைச் சாட்டாகக் கொண்டு துருக்கிய பொருளாதாரத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடிகளுக்குக் கொண்டு வருவதற்கான முனைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

ஆமெரிக்காவின் இச்செயலை தனித்த விடயமாகப் பார்க்க முடியாது. 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்க தன்னிச்சையாக கைவிட்டதை அடுத்து ஈரானுக்கு எதிராகவும் புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆதில் குறிப்பாக ஈரானிய எரிசக்தி ஏற்றுமதிகள் மற்றும் வங்கித்துறை மீதான தடைகள் குறிப்பிடத்தக்கன.  இதேபோல இங்கிலாந்தில் ரஷ்ய உளவாளி நஞ்சூட்டப்பட்ட ‘ஸ்கிரிப்போல் விவகாரத்தை’ காரணங்காட்டி ரஷ்யா மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதேபோலவே சீனாவின் மீதான வர்த்தகப் போர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்கள் மீதான அதிகரித்த வரிவிதிப்புகள் என்பனவும் இவ்வாண்டு நடந்தேறியுள்ளன.

இவற்றின் உண்மையான நோக்கம் யாதெனில் வர்த்தக போர், பொருளாதார தடைகள் மற்றும் நேரடி இராணுவ மோதலுக்கான வழிவகைகள் மூலமாக அமெரிக்கா தன் எதிரிகள் மற்றும் கூட்டாளிகள் என அனைவரின்  முதுகிலும் தன் சொந்த நெருக்கடியைச் சுமத்தும் முயற்சியின் பகுதியே.

அதேபோலவே உலகின் ஒவ்வொரு அரசையும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்காவை மையமாக கொண்ட பன்னாட்டு பெருநிறுவனங்களின் நலன்களுக்கு அடிபணிய செய்வதற்கான செய்நிரலின் ஒரு பகுதியாகவும் இதை நோக்கவியலும்.

துருக்கி மீதான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு இன்னொரு முகமுண்டு. துருக்கிய எர்டோகன் அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை மத்திய கிழக்கிலும் இன்னும் பரந்தளவில் யூரேஷியாவிலும் அமெரிக்க புவிசார் மூலோபாய நோக்கங்களைக் குறுக்காக வெட்டியுள்ளது.

துருக்கி அதன் தெற்கு எல்லையில் அதன் நலன்களைப் பின்தொடர்வதற்கு அனுமதிக்கும் வகையில், சிரியா சம்பந்தமாக அது ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டுடனும் ஓர் ஏற்பாட்டை எட்டியுள்ளது. மேலும் துருக்கிய அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து நவீன ஏவுகணை அமைப்புமுறையைக் கொள்முதல் செய்யும் திட்டங்களை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் எரிசக்தி இறக்குமதிகளின் பிரதான ஆதாரமாக உள்ள ஈரானுக்கு எதிராக வாஷிங்டன் திணித்து வருகின்ற தன்னிச்சையான தடையாணைகளுக்குக் கட்டுபடும் எந்த எண்ணமும் அதற்கு இல்லை என்பதை துருக்கி  வெளிப்படுத்தியுள்ளது.  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் “ஈரானுடன் வியாபாரம் செய்யும் எவரொருவரும், அமெரிக்காவுடன் வியாபாரம் செய்ய முடியாது,” என்று தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இன்னொரு வகையில் துருக்கியின் பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை பெரியளவில் பாதிக்காது. துருக்கி அமெரிக்கப் பொருட்களுக்கான வெளிநாட்டு சந்தைகளில் 28 வது இடத்தில் உள்ளது, இந்தாண்டின் முதல் பாதியில் அமெரிக்க ஏற்றுமதிகளில் வெறும் 0.6 சதவீதம் மட்டுமே துருக்கிக்குரியன. இந்தாண்டின் முதல் காலாண்டு முடிவில் அமெரிக்க வங்கிகள் துருக்கிய கடனில் வெறும் 38 பில்லியன் டாலர் மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்மாறாக ஸ்பானிய, பிரெஞ்சு மற்றும் இத்தாலிய வங்கிகள் முறையே 83.3 பில்லியன் டாலர், 38.4 பில்லியன் டாலர் மற்றும் 17 பில்லியன் டாலரைத் துருக்கிக்குக் கடனாக வழங்கி உள்ளன.

துருக்கிய நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பரவுவததை அமெரிக்க விரும்புகிறது.  அது ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு மூலோபாய போட்டியாளராக காண்கிறது. இதற்கிடையே, துருக்கிய லீராவின் சரிவானது எழுச்சி பெற்று வரும் சந்தை பொருளாதாரங்கள் (பிரிக்ஸ் நாடுகள் உள்ளடங்களாக எங்கிலும் துணைவிளைவுகளை ஏற்படுத்தி உள்ளது, இந்தியாவில் இருந்து மெக்சிகோ மற்றும் தென் ஆபிரிக்கா வரையில் பணப்பெறுமதியிழப்பு உள்ளிட்ட பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கிப் பத்தாண்டுகள் முடிவடையும் நிலையில் உலகம் இன்னமும் தீராத பொருளாதார நெருக்கடியிலேயே சிக்கியுள்ளது என்பதை துருக்கி நிலவரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. புத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை விட மோசமான பொருளாதார நெருக்கடிக்கான வாய்ப்புகள் அதிகளிவில் உள்ளன என்பதை எதிர்வுகூறுவது கடினமுமல்ல அதை விளங்குவதும் சிரமமல்ல.

இதில் விளங்கிக் கொள்ள வேண்டியது யாதெனில் கடந்த பத்தாண்டில் உலக பொருளாதாரத்தின் தன்மை மிகப்பெரிய மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியானது உற்பத்தி வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளின் மூலமாக நடைபெறவில்லை மாறாக பணமானது ஊகவணிக நடவடிக்கை மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாய்ந்ததன் மூலமாக நடைபெற்றுள்ளது.

அதற்கேற்ப, பணமானது துருக்கி போன்ற எழுச்சிபெற்று வரும் சந்தைகள் என்றழைக்கப்படுவதற்கு உள்ளே பாய்ந்துள்ளது, அந்த அரசுகளும் பெருநிறுவனங்களும் அமெரிக்க டொலர் அடிப்படையிலான கடன்கள் மற்றும் பிற வெளிநாட்டு செலாவணி கடன்களை மிகவும் மலிவான விகிதங்களில் பெற்றுக்கொள்வதிலிருந்து விளைந்த, அதிக வட்டிவிகித இலாபத்திற்கான சாத்தியக்கூறும் வேகமான வளர்ச்சி விகிதமும் விரைவான இலாபங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

சர்வதேச நிதியியலுக்கான அமைப்பு (Institute of International Finance) வழங்கியுள்ள புள்ளிவிபரங்களின்படி 30 மிகப்பெரிய எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் ஒருங்கிணைந்த கடன்நிலையானது (indebtedness) 2011ம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 163 சதவீதமாக இருந்தது.  இவ்வாண்டின் முதற் காலாண்டு நிறைவில் 211 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முன்சொன்ன பணமானது எழுச்சி பெறும் பொருளாதாரங்களுக்கு (emerging economies) பாய்ந்ததன் விளைவு. இதன் ஆபத்தான நிலையை பணத்தில் அடிப்படையில் நோக்கினோமானால் இது எழுச்சி பெறும் பொருளாதாரங்களின் கடன்களில் 40 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.

துருக்கி மீதான அமெரிக்கத் தடையின் உடனடி விளைவாக தென்னாபிரிக்க நாணயமான ரான்ட் பத்து சதவீதம் சரிந்தது. இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாற்றிலேயே அதன் குறைந்த மட்டத்திற்கு வீழ்ந்தது.  ஆர்ஜென்டீனிய பெசோவின் வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஆர்ஜென்டீனா உதவி கோரியுள்ளது. பிரேசில் மிகப்பெரிய பொருளாதார சரிவில் உள்ளது.

எழுச்சி பெறும் பொருளாதாரங்களின் பொருளாதார நெருக்கடி நிலையாது, 1997-98 காலப்பகுதியில் ஆசியாவில் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியை நினைவூட்டுகின்றன. பொருளாதாரப்புலிகள் எனப் புகழப்பட்ட நாடுகள் வங்கிரோத்தான கதைதான் அக்கதை. இதில் நினைவூட்ட வேண்டியது யாதெனில் அச்சரிவைத் தொடக்கியது தாய்லாந்து நாணயமான பாஹ்த்தின் வீழ்ச்சியே. அதேபோல துருக்கியின் லீராவும் இன்னொன்றைத் தொடக்கிவிடுமோ என்று பலர் அஞ்சுகிறார்கள்.

நெருக்கடி அத்துடன் முடிவடையாது என்பது தான் இதில் முக்கியமானது. அமெரிக்கா தனது நெருக்கடியை மற்றவர்களின் தலையில் கட்டுவதன் ஊடு தப்பிப்பிழைக்க முயல்கிறது. ஆதற்கான அது யாருடனும் பகைக்கத் தயாராக இருக்கிறது. அண்மையில் ஜி-7 மாநாட்டில் அமெரிக்க நடத்தை அதைக் காட்டியது. இன்று மேற்குலக நாடுகள் தமக்குள் மோதுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஓட்டைப் படகில் இருந்து குதித்துக் கரையேற பிரித்தானியா துடிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சிறிய நாடுகள் வலையில் மாட்டிய மீன்போல் எதுவும் செய்யவியலாமல் சின்னாபின்னமாகின்றன. ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவை ஆதிக்கத்துக்கான போட்டியில் முனைப்பில் உள்ளன. எல்லா நாடுகளுமே தொழிலாளர்; வெட்டுக்கள், வேலையிழப்புகள், சமூக நலதிட்டக் குறைப்புகள் என்பவற்றின் ஊடு தம்மைத் தக்கவைக்க முனைகின்றன. உழைக்கும் மக்களே இதன் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

துருக்கிய நெருக்கடி உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தையும் ஆபத்தையும் காட்டியுள்ளத. இந்நெருக்கடியின் கோலங்கள் கட்டவிழ்ந்துள்ளன. இனிக் காட்சிகள் கட்டவிழும் அவலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம். முரண்நகை யாதெனில் எமது அவலமும் இந்த அவலநாடகத்தின் பகுதியாகும். உண்மை கொஞ்சம் ஏற்கக் கடினமானதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *