அரசியல்உலகம்

சமூகநல அரசின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்

மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது. மக்களின் நலன்களைக் காப்பதாக அரசு என்றவொன்று என்றும் இருந்ததில்லை. ஆனால் போராட்டங்களும் புரட்சிகளும் அரசை மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது. அரசுகள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் மக்கள் நலன்களை இல்லாமல் செய்கின்ற நிலையிலும் சுவீடன், நோர்வே ஆகிய ஸ்கன்டினேவிய நாடுகள் சமூக நலத்திட்டங்களைப் தொடர்ந்து பேணி வந்தன. ஆனால் இன்று நிலைமை மாறுகின்றது.

உலகின் பல்வேறு பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஸ்கன்டினேவிய நாடுகளுக்கு தனித்துவமான பண்பு உண்டு. தொழிலாளர் போராட்டங்களின் நீண்ட வரலாறு, வலிமையான தொழிற்சங்கங்கள், தொடர்ச்சியான தொழிற்கட்சிகளின் ஆட்சி. சமூகநல அரசின் உருவாக்கமும் அதன் நிலைபேறு என்பன அதன் தனித்துவமான பண்புகள். கடந்த பத்தாண்டுகளில் இந்நாடுகளில் வலதுசாரிச் சிந்தனையும் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்து வந்துள்ளது. இது பல்வேறான தாக்கங்களை அந்நாடுகளின் அரசியலிலும் சமூகத்திலும் பண்பாட்டு நடைமுறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது. இவை உலகின் இறுதிச் சமூகநல நாடுகள் என்றழைக்கப்படும் இந்நாடுகளில் சமூகநல அரசின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

சமூகநல அரசின் கதை: சொல்லாமல் விட்டது

சமூகநல அரசு என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போரின் முடிவில் மேற்குலக நாடுகளில் தோற்றம் பெற்றது. ரஷ்யப் புரட்சியின் விளைவால் விளைந்த மக்கள் நலத் திட்டங்களை மையப்படுத்திய சோவியத் அரசு முன்மாதிரியாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் விளைவால் ஏற்பட்ட பின்னடைவை ஈடுகட்டவும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும் சோவியத் யூனியனும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மறுகட்டுமானப் பணிகளில் இறங்கின. இது மக்கள் மைய சமூகப் பொருளாதார நலன்களை முன்னிறுத்துவனவாக இருந்தன.

சோவியத் யூனியனிலும் அதன் நட்பு நாடுகளிலும் ஏற்பட்ட மாற்றமும் அங்கு தொழிலாளர் வாழ்வில் ஏற்பட்ட முன்மாதிரியான மாற்றங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களை சிந்திக்க வைத்தன. அவர்கள் அரசுகள் சமூக நலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்கள். தொடக்கத்தில்  இக்கோரிக்கைகளைப் புறக்கணித்த அரசுகள் காலப்போக்கில் தொழிற்சங்கங்களின் வலிமையான செயற்பாடுகளின் விளைவால் கலக்கமடைந்தன. கம்யூனிசத்தின் செல்வாக்கு அதிகரிக்கும் அபாயத்தை இனங்கண்டு கொண்ட மேற்குலக முதலாளித்துவ நாடுகள் சமூகநலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் விசுவாசத்தை பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டனர். அதேவேளை தத்தம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் தீவிர இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். அதற்கு கம்யூனிச அபாயம் எனப் பெயர் சூட்டினர். சமூக நலத்திட்டங்களைப் பெறுவதற்காக இந்நாட்டுத் தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்பட்டதோடு அரசுகளுக்கு கம்யூனிஸ்ட் அபாயத்தை ஒடுக்க உதவியும் வழங்கினர்.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு, வேலையில் உத்தரவாதம், அனைவருக்கும் இலவச மருத்துவம், இலவச உயர்கல்வி,  முழுச் சம்பள ஓய்வூதியம், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச ஓய்வு விடுதிகள், பெண்களுக்கு நீண்ட பேறு கால விடுமுறை  எனப் பல்வகைப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் சோவியத் முகாமில் இருந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பகுதிகள் சமூக நலன்களாக மேற்குலக நாடுகளுக்கு வந்து சேர்ந்தன.

பல்வேறு வடிவங்களில் நாம் காணுகிற சமூக நலன் பேணும் முதலாளிய அரசானது, ஆளும் வர்க்கத்தின் நல்லெண்ணத்தின் விளைவானதல்ல. முதலாளிய சமூகத்தில் எடுக்கப் படும் சமூக நல நடவடிக்கை ஒவ்வொன்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களது போராட்டங்களது நேரடியான அல்லது மறைமுகமான விளைவே. முதலாளியம் ஏகாதிபத்தியமாக மாறியதும் நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலக மயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும் 1980களிலிருந்து ஒரு அரசியல் சக்தியாக நவ தாராளவாதம் கண்ட எழுச்சியுடன் சேர்ந்து, கொண்டன. அவை முன்னேறிய முதலாளிய நாடுகளில் சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமான அரசு ஆற்றிய பங்கிற்குக் குழி பறித்துள்ளன. மூ

நிதிமூலதனத்தின் வளர்ச்சியும் ஏகபோகமும் அரசுகளின் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தங்களின் காரணமாக அரசு தனது சமூகப் பொறுப்பைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. அதன் விளைவாக அரசு வழங்கி வந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு நிவாரணம் மட்டுமன்றி அரசு பொறுப்பெடுத்து இருந்த கல்வி, உடல் நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர் வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள் மெல்லச் சிதைய விடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அவை ஒரே வீச்சில் வெட்டிக் குறுக்கப் பட்டோ கைவிடப் பட்டோ உள்ளன.

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் சமூக நலத்தில் கல்வியும் பொதுச் சுகாதாரமும் பெற்ற முக்கியத்துவம், பொருளியல் வளங்களின் மீதும் உடல் வலிமையும் போதியளவு எழுத்தறிவுங் கொண்ட ஒரு உழைப்பாளர் படையினது தேவை உணரப் பட்டிருப்பதன் மீதும் தங்கி இருந்தது.

உலகமயமாக்கல், சுயாதீனமான சந்தை, சந்தைச் சக்திகள், தாராளமயம் போன்ற கருத்துக்கள், எல்லா நாடுகளின் அலுவல்களையும் நடத்துவதில் அரசின் பங்கைக் குறைப்பதற்கும் சமூகத்தின் தேவைகளை எவ்வாறு நிறைவு செய்வது என்பதைப் போட்டி, முன்முயற்சி எனும் மனிதரின் ‘இயல்பான சக்திகள்;” கட்டற்ற மூலதனத்தின் வருகையுடன் இணைந்து முடிவு செய்வதற்குமாக அமைக்கப் பட்டவை என்ற எண்ணம் சர்வவியாபக உண்மை என நம்பவைக்கப்பட்டது.

சமூகப் பாதுகாப்பை வழங்கும் ஒரு அமைப்பு எனும் வகையில் அரசின் வகிபாகம், அதாவது நவ தாராளவாதச் சொல்லாடலில் ‘ஆயா அரசு”, உலகில் பரவலாகத் தாக்குதலுக்கு உட்பட்டு உள்ளுத. இதில் மூன்றாம் உலக நிலைமைகள் மோசமாகியுள்ளன.

அந்நிய அரசாங்கங்களிடமிருந்தும் கடன் வழங்கும் முகவர்களிடமும் சர்வதேச வங்கிகளிடமும் இருந்தும் கடன் வாங்கியதால் கடன் பட்ட நாட்டின் பொருளாதாரம் வெளியிலிருந்து வந்த அழுத்தங்களால் வழிநடத்தப் பட்டதுடன் வட்டியுடன் கடனை மீளச் செலுத்துவது பொருளாதார நிகழ்ச்சி நிரலில் ஒரு பிரதான அம்சமாகியது. அரச நிறுவனங்களை ‘மீள்கட்டமைக்குமாறும்” ‘சீர்திருத்தங்களை” மேற்கொள்ளும் படியுங் கடன் வழங்கியோர் வற்புறுத்தியதால் சமூக சேவைகட்கும் பிற அரச பொறுப்புக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி, வரிக் குறைப்பு முதலான பிற கடப்பாடுகளாற் பறிக்கப் பட்டது.

மூன்றாம் உலக நாடுகளின் அரசகள் பெருவாரியான தருணங்களில் சமூகப் பாதுகாப்பினது காவலனும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோனும் என்ற தனது வகிபாகத்திற் தவறி விட்டது. மூன்றாம் உலக நாடுகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தாங்கள் பரிந்துரைத்த பொருளியற் தாராளமயம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மீள் கட்டமைத்தல் என்பனவற்றை முற்று முழுதாக நிறைவேற்றத் தவறியதாலேயே ஏற்படுகின்றன என்று நவ தாராளவாதிகளும் உலக மயமாக்கலின் பிற ஆதரவாளர்களும் வற்புறுத்திக் கூறுகின்றனர். இன்று இலங்கையில் நடைபெறும் வாதப்பிரதிவாதங்களை இதன் பின்னணியில் பொருத்திப்பார்க்கவியலும்.

சுவீடனின் தேர்தல் முடிவுகள்: மாறுங்காலங்கள்

சுவீடன் மிக நீண்டகாலமாக சமூகநலன்பேணும் அரசாகவும் தொழிற்கட்சியின் ஆதிக்கத்துடன் கூடிய அரசாகவுமே தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் சுவீடனும் வலது தீவிரத் தேசியவாதத்தின் பக்கம் திரும்புவதைக் குறிகாட்டியது. முழுமையான முதலாளித்துவ நவதாரளவாதத்தை ஆதரிக்கும் வலதுசாரிக் கட்சியின் வளர்ச்சி புறக்கணிக்கக்கூடியதல்ல. அரசில் செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு அக்கட்சி வளர்ந்துள்ளது.

நவ-நாஜி மற்றும் வெள்ளை-மேலாதிக்கவாத இயக்கத்தில் இருந்து தோன்றி வந்ததான, சுவீடன் ஜனநாயகக் கட்சி, 17.6 சதவீத வாக்குகளுடன் 349 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் 63 தொகுதிகளில் வென்று, சமூக ஜனநாயகக் கட்சியினர் மற்றும் மிதவாதிகளுக்குப் பிந்தைய மூன்றாவது பெரும் தனிக்கட்சியாக ஆகியிருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளின் பெரும்பகுதியில் சுவீடனை ஆட்சி செய்து வந்திருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் அதன்  மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பாரம்பரியமாக இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்திருக்கக் கூடிய மிதவாதிகளின் கட்சியும் தனக்கான ஆதரவில் ஒரு கூர்மையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது,

சுவீடனில் நடந்து கொண்டிருப்பவை, முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியின் கீழ் ஐரோப்பா முழுமையிலும் மற்றும் உலகின் பெரும்பகுதியிலும் காணக்கூடியதாக இருக்கின்ற பொதுவான அரசியல் பாதைவழியையே பின்பற்றிச் செல்கிறது. அதேவேளை சமூகநல அரசாகச் சொல்லிக்கொண்டாலும் நவதாளவாதத்துடன் சமூகநலன்களைச் சமன்செய்து முதலாளித்துவ நாடாகத் திகழ முனைந்த ஒரு நாட்டின் கதையாக இதைச் சொல்லவியலும்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development – OECD) இவ்வாண்டு அறிக்கையானது, 1985க்கும் 2010க்கும் இடையிலான காலத்தில் சுவீடனில் சமத்துவமின்மை, அமைப்பில் அங்கம் வகிகிகும் வளர்ச்சியடைந்த நாடுகளில்  வேறெந்த நாட்டை விடவும் வேகமாய் வளர்ந்திருந்ததாக கண்டறிந்தது.

2014 இல், மொத்த செல்வத்தில் 68 சதவீதத்திற்கும் அதிகமாய் மக்கள்தொகையின் தலைமையில் இருக்கும் 10 சதவீதம் பேரிடம் இருந்ததாக, கிரெடிட் சுவிஸ் உலகளாவிய சொத்து அறிக்கை (Credit Suisse’s Global Wealth Report) கூறுகிறது. இந்த மட்டத்திலான செல்வக் குவிப்பு சுவிஸ்லாந்தை தவிர்த்து ஐரோப்பாவிலுள்ள வேறெந்த நாட்டை விடவும் அதிகம். இதன்பின்னணியில் தொடர்ச்சியாக சமூகநல வெட்டுக்கள் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்று வந்துள்ளன. இவ்வெட்டுக்களின் கேடுகளை சுவீடன் மக்கள் அனுபவித்து வந்த நிலையில் அனைத்துக்கும் காரணம் அகதிகளாகவும் குடியேற்றவாசிகளாகவும் வந்திருக்கின்றவர்களே என்று வலதுதீவிர தேசியவாதிகள் குற்றஞ்சாட்டி ஆதரவைப் பெற்றுள்ளார்கள். இது ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளிலும் நடக்கிறது. இதன் மூலம் இரண்டை இவர்கள் சாதிக்கிறார்கள். முதலாவது அகதிகளுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான மனோநிலையையும் அதைக் கொள்கைவகுப்பிலும் நடைமுறைப்படுத்த அரசைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இரண்டாவது மக்கள் கட்டும் வரிப்பணம் சமூகநலத்திட்டங்களின் விளைவால் மக்களுக்குப் பயன்படாமல் அகதிகளுக்கு பயன்படுகிறது என்ற பொய்யை மக்கள் மத்தியில் வளர்;க்கிறார்கள். இதன்மூலம் சமூகநலத்திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவைப் பெறுகிறார்கள்.

நோர்வே: சந்தையைக் கட்டியணைத்தல்

சுவீடன் மக்களிடம் இருக்கும் மனோநிலையே நோர்வேஜியர்களிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை சந்தைப் பொருளாதாரமே அனைத்தும் தீர்வு என்று அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள். திறந்த சந்தையும் போட்டியுமே நல்லது என்றும் மக்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளது. எண்ணெய் வளத்தின் விளைவால் மிக உயர்வான சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகளை அடைந்த சமூகம் என்ற நிலையில் தனியன்களாக வாழ்வது என்பதை பிரதானப்படுத்தி சமூகவாழ்வை சமூகத்துடன் இணைந்த வாழ்வியலை அவர்கள் மெதுமெதுவாகக் தொலைக்கிறார்கள். அண்மைய கணக்கெடுப்பின்படி ஒரு நோர்வேஜிய வீட்டில் சராசரியாக 1.21 மனிதர்களே வசிக்கிறார்கள். இது சொல்லுகிற செய்தி மிக வலியது.

சந்தைகளின் கூடாரமாக நுகர்வின் உச்சபச்ச மையங்களில் ஒன்றான நோர்வே இருக்கிறது. உயர்வான வாழ்க்கைத்தரத்தை உறுதிசெய்தது சமூக நலத் திட்டங்களே. ஆனால் இன்று சந்தைதான் அதைத் தக்கவைக்கும் என நம்பப்படுகிறது. கட்டற்ற சந்தைகளை மெதுமெதுவாக அனுமதித்த தொழிற்சங்கங்கள் இன்று வெறுமையை எதிர்நோக்குகின்றன. இப்போது அரசு தனியார்மயமாக்கலை அதிகரிக்கிறது. சுந்தைப்பொருளாதாரம் அனைத்தையும் தீர்மானிக்க அனுமதிக்கிறது. சமூகநலங்களின் விளைவால் உருவான உயர் வாழ்க்கைத்தரம் இவர்களுக்கு உயர் நுகர்வுக்கான வாய்ப்பை வழங்கியது. நுகர்வின் பேரால் நவதாரளவாதம் சந்தை விதிகள் என அனைத்தையும் நோர்வேஜியர்கள் அனுமதித்தார்கள். இன்று எந்த சமூக நலக் கொள்கைகள் உயர்வான சம்பளம், நியாயமான வேலைநேரம், விடுமுறை வேலைப்பாதுகாப்பு என்பதை உறுதிசெய்ததோ அதை இந்த சந்தைவிதிகள் குழிதோண்டிப் புதைத்துள்ளன.

எந்தச் சந்தைகளை கட்டியணைத்தார்களோ அதே சந்தைகள் இவர்கள் துன்பத்தையும் நிச்சயமின்மையையும் கட்டியணைக்கக் காரணமாயுள்ளது.

நிறைவாக

இன்று ஸ்கன்டினேவிய அனுபங்கள் மூன்றாமுலக நாடுகளுக்கு நல்ல பாடங்களைத் தருகின்றன. குறிப்பாக இலங்கை போன்ற நாடுகள் எஞ்சியிருக்கின்ற மிச்ச சொச்சச் சமூகநலன்களைத் தக்கவைத்தாக வேண்டும். அதில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன பிரதானமானவை.

அனைத்தையும் தனியார்மயமாக்குவதன் மூலம் வினைத்திறனான சேவையைப் பெறமுடியும் என்பவர்கள் தனியார்மயம் எவ்வாறு இலாபவெறியையும் பொறுப்பின்மையையும் தூண்டியுள்ளது என்பதை நோக்க வேண்டும். தனியார்மயமான துறைகளின் வினைத்திறனின்மையை மூன்றாமுலக நாடுகள் நன்கறியும்.

இப்போது தேசியவாத வெறியும் அரசியல்ரீதியாக வலது நோக்கிய திருப்பமுமே சமூகநல வெட்டுக்களையும் தனியார்மயத்தையும் முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகிறது. பெருந்தேசியவாத அகங்காரம் அடிமடியிலேயே கைவைக்கிறது. இதைப் பலர் உணர்வதில்லை. தேசியவாதம் விடுதலையைப் பெற்றுத்தராது. அது இன்னொரு அடிமைத்தனத்தில் எங்களை ஆழ்த்திவிடும் வேலையையே செய்கிறது. சந்தையும் நிதிமூலதனமும் வேண்டுவதைத் தேசியவாதிகள் உணர்ச்சிகர உச்சாடணங்களோடு நடாத்தி முடிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *